tamilnadu

img

கர்நாடக சட்டசபையில் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு - சபாநாயகர் அறிவிப்பு

கர்நாடக சட்டசபையில் குமாரசாமி தலைமையிலான அரசு மீது வரும் 18-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கூட்டணி கட்சியில் இருந்த 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால், இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. 

இந்த நிலையில் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொள்ளுமாறு சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடிதங்களை பெற்று கொண்ட சபாநாயகர், கடிதங்களின் மீது நடவடிக்கை எடுக்க 17-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் அதிருப்தி எம்எல்ஏ மும்பையில் தங்கியுள்ளனர்.

இன்றைய தினம் கர்நாடக சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பங்கேற்க, காங்கிரஸ்,  மதசார்பற்ற ஜனதா தளம், பாஜக உறுப்பினர்கள் சட்டசபைக்கு வந்தனர். அப்போது சட்டசபை அலுவல் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து பேசிய எடியூரப்பா, ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பின்னர் வரும் 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

16 எம்எல்ஏக்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்டிபி நாகராஜ் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்ப உள்ளார். இந்த நிலையில் மீதமுள்ள 15 பேரும் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.