tamilnadu

img

பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் பட்டமளிப்பு விழா உடை அணிந்து பகோடா விற்ற கல்லூரி மாணவர்கள்

பிரதமர் மோடியின் ஊர்வலம் நடந்த இடத்தின் அருகில் பட்டமளிப்பு விழாவின் உடையை அணிந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் சிலர் பகோடா விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 5 வருட மோடி ஆட்சியில் வேலை இல்லா திண்டாட்டம் என்பது கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசில் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பு என்பது திட்டமிட்டு சுருக்கப்பட்டுள்ளன. அரசில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஆனால், பிரதமர் இதை பற்றி இதுவரை எந்த இடத்திலும் பேசுவதில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது.


இந்நிலையில் மே 19ம் தேதி நடைபெறவுள்ள கடைசி கட்ட தேர்தலுக்காக சண்டிகரில் பிரதமர் மோடி பிரச்சார பயணம் மேற்கொண்டார். சண்டிகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கிரோன் கெர் என்பவரை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சார ஊர்வலம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழா உடையை அணிந்து கொண்டு ”மோடி பக்கோடா” என பக்கோடா விற்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுகுறித்து கூறிய பகுதி 34 காவல்நிலைய அதிகாரி பல்தெவ் குமார், ” கல்லூரிகளில் பொறியியல், கலை மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள் 12 பேர் பட்டமளிப்பு விழா உடையில் பக்கோடா விற்றனர். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டு ஊர்வலத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒருவர் கூறுகையில், நாங்கள் மோடியின் பக்கோடா யோஜனா திட்டத்தில் வேலை அளித்ததற்காக இங்கு கூடியுள்ளோம். படித்த இளைஞர்கள் நாங்கள் மோடியின் ஊர்வலத்தில் பக்கோடா விற்கும் பெருமை அவருக்கு தெரிய வேண்டும் என கூறினார்.