tamilnadu

img

‘சனாதன சன்ஸ்தா’ அமைப்பினரே கவுரி லங்கேஷ் கொன்றார்கள்...

பெங்களூரு:

பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பான விசாரணையை கர்நாடக சிறப்புப் புலனாய்வு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பான, ஒரு பகுதி ஆவணங்களை, பெங்களூரு நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு தாக்கல் செய்துள்ளது.


கவுரி லங்கேஷ் வழக்கில் சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்திருக்கும் ஆவணங்களின் படி, கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று பேர் ‘சனாதன சன்ஸ்தா’ அமைப்பில் தொடர்புடையவர்கள், 4 சாட்சிகள் அந்த அமைப்பின் குண்டு தயாரிப்பில் பயிற்சி பெற்றவர்கள்.2008-ஆம் ஆம் ஆண்டில் மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கில், போபால் மக்களவைத் தொகுதியின் தற்போதைய பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் மற்றும் 13 பேர் ‘பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்’ என அறிவிக்கப்பட்டனர். 


இந்நிலையில், அந்த 13 பேர்களில் காணாமல் போனதாக கூறப்பட்ட, ராம்ஜி கல்பாங்ரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகியோர், கவுரி லங்கேஷ் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.சனாதன் சன்ஸ்தா அமைப்பு துப்பாக்கி சூடு, மேம்பட்ட குண்டு வெடிப்பு ஆகியவற்றை பயிற்றுவிக்கும் 19 பயிற்சி வகுப்புகளை 2011 முதல் 2017-க்குள் நடத்தி முடித்திருப்பதாகவும், இதில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகாவில் சிறப்பு வெடிகுண்டு நிபுணர்கள் கலந்துக் கொண்டதாகவும், சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கவுரி லங்கேஷ் வழக்கில், சந்தேகம் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் ’பாபாஜி’ போன்ற சில பயிற்சியாளர்கள் துறவி உடை அணிந்து சென்றிருக்கிறார்கள். பெட்ரோல் குண்டு முதல் அதி நவீன குழாய் குண்டுகள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள்.


பயிற்சி முகாம்கள் பல முக்கிய இடங்களில் நடந்திருக்கின்றன என்பதையும் சிறப்பு விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. 2011-ஜல்னா, 2015 ஜனவரியில் ஜல்னா, ஆகஸ்ட் 2015-ல் மங்களூரு, நவம்பர் 2015-இல் அகமதாபாத், 2016 ஜனவரியில் நாசிக் ஆகிய 5 பயிற்சி முகாம்கள் முக்கியத்துவம் பெறுவதாக சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதாப் ஹஸ்ரா என்பவரால் 5-வது பயிற்சியாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மேற்கு வங்க இந்துத்துவ இயக்கத்தின் முக்கியப் புள்ளி பவானி சேனாவுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது.