tamilnadu

img

ஊரடங்கில் மளிகை பொருட்கள் வாங்கச்சென்றவர் புதுமனைவியுடன் வந்தார்

காசியாபாத்:
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹூடு (26). இவர் சுவேதா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் ஹரித்துவாரில் ஆர்ய சமாஜ் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கோவிலில் இருவரும் செய்துகொண்ட திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் தனது மனைவி சுவேதாவை தில்லியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அவரை தங்கவைத்தார். மேலும், இருவரும் திருமணம் செய்ததன் ஆதாரமாக விளங்கும் சான்றிதழை பெற ஹூடு முயற்சி செய்து வந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கிடையில், தில்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டைக் காலி செய்யும்படி வற்புறுத்தினார். இதனால்  அவர் தனது கணவர் ஹூடுவிடம் நிலைமையை எடுத்துரைத்தார்.

இந்த நிலையில், காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை அவரது தாயார் புதனன்று மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி வைத்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு நேரடியாக தனது மனைவி சுவேதா தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று அவரை அங்கிருந்து காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.மளிகைப் பொருட்களை வாங்கச்சென்ற தனது மகன் இளம் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்துவந்து இவர்தான் உங்கள் மருமகள் என கூறியதால்  ஹூடுவின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.  ஆனால் தனது மகனையும், அவரது மனைவியையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறிவிட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த ஷகீபாபாத் பகுதி காவல்துறையினர் மகன் ஹூடுவையும், மருமகள் சுவேதாவை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கும்படி அந்த பெண்ணிடம் கோரிக்கை விடுத்தனர்.  பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் ஊரடங்கு முடியும் வரை தம்பதிகள் இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தி பிரச்சினையை தற்காலிகமாக தீர்த்துவைத்துள்ளனர்.
 

;