tamilnadu

img

ரயில்வே இன்ஜினியரிங் தொழிலாளர்களிடையே கொரோனோ பரவும் அபாயம் : டிஆர்இயு எச்சரிக்கை

சென்னை, ஏப்.10- ரயில்வேயில் ரயில் ஓட்டம் நின்ற போதும் பெரும்பாலான இஞ்சினியரிங் தொழிலாளர்கள் பாதுகாப்பு இல்லாமலும், ஊரடங்கு, 144 தடையையும் மீறி வேலை செய்து வருவதால் ரயில்வே ஊழியர்களிடம் கொரானா பரவுவதை தடுக்க முடியாது என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிஆர்இயூ வின் உதவித் தலைவரும், இஞ்சினியரிங் சப்கமிட்டியின் சேர்மனுமான எஸ். சாம்பசிவன் வெளியிட்டுள்ள அறிக்கை:- இந்தியா முழுவதும் ரயில் சேவை நிறுத்தம் முடக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிகள் நஷ்டம் என்று தெரிந்தே ரயில்வே தனது சேவைகளை நிறுத்தி விட்டது. தவிர்க்க முடியாத நிலையில் சரக்கு வண்டிகள் மட்டும் சில இடங்களில் இயக்கப்படுகிறது. பல இடங்களில் ரயில் சேவை மூடப்பட்டுள்ளது. கூட்டமாக, நெருக்கமாக ஊழியர்கள் வேலை செய்வதை தடுத்திட ஷெட், ஷாப் மற்றும் அலுவலகங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சைக்காக 2500 கோச்சுகள் "பெட்டி வார்டு "களாக மாற்றபட்டும், பொன்மலை ஒர்க்ஷாப்புகளில் கட்டில்கள் செய்யும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. ரயில்வே ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டும் பல இடங்களில் பாதுகாப்பு சாதனங்களும் வழங்கபட்டுள்ளது. வேலைக்கு வர முடியாத வர்களுக்கு சிறப்பு விடுப்பும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டமாக வேலை செய்வதை தடை செய்தும், தனிமை படுத்தியும் பல முன் ஏற்பாடுகளையும் ரயில்வே செய்து வருகிறது. எனினும் சரக்கு வண்டிகள் ஓடும் பகுதியில் வேலை செய்யும் இஞ்சினியரிங், டிராபிக், எலக்ட்ரிக்கல், சிக்னல், மெக்கானிக்கல், ஓடும் தொழிலாளர்கள் எப்போதும் போலவே பணி செய்து வருகிறார்கள். போக்குவரத்து வசதிகளின்றி இரவு பகல் டூட்டிக்கு வரும் போதும் ,போகும் போதும் பணி செய்யுமிடங்களில் சாப்பாடு, சிற்றுண்டி இல்லாமல் பல சிரமங்களை தாங்கி சரக்கு வண்டிகளை இயக்கி வருகிறார்கள். அதே வேளையில் சரக்கு வண்டிகள் ஓடாத செக்சன் மூடபட்டுள்ளது. ஆனால், இந்த செக்சனில் இஞ்சினியரிங் பகுதி தொழிலாளர்கள், கேட் கீப்பர்கள், டிராக் மெயிண்டனர்கள் கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள்.

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட்ட தென்னக ரயில்வே முழுவதும் சரக்கு வண்டிகள் ஓடாத பகுதியில் இஞ்சினியரிங் தொழிலாளர்கள் மட்டுமே எந்தவித பாதுகாப்புமின்றி, கூட்டம் கூட்டமாக வேலை வாங்கப்படுகிறார்கள். இதில் கேட் கீப்பர்கள் அவர்களது வேலையை விட்டு டிராக் மெயிண்டனர்களுடன் இணைக்கப்பட்டு முககவசம் கையுறை போன்ற பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமல் ஒன்றாக சேர்ந்து கடுமையாக வேலைகளை செய்திட நிர்ப்பந்திக்கபட்டு வருகிறார் கள். இது தொடர்பாக ஜிஎம்மிற்கும், டிஆர்எம் மிற்கும் மற்றும் இஞ்சினியரிங் உயர் அதிகாரிகளுக்கும் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு மண்டல முதன்மை இஞ்சினியர் (CTE )சென்னையில் இருந்து வேலை சம்பந்தமான வழிகாட்டல் உத்தரவை வெளியிட்டார். அதில் சரக்கு வண்டிகள் ஓடும் செக்சனில் மட்டும் . ஓஎம்எஸ், இன்ஸ்பெக்சன் நோட்ஸ் மற்றும் காஷனில் அவசரமான வேலைகளை மட்டும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

சரக்கு வண்டிகள் ஓடாத செக்சனில் வண்டிகளே ஓடாத போது நோட்ஸ் வேலைகளுக்கு வேலை கிடையாது அதனால் இஞ்சினியரிங் தொழிலாளர் கள் கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி தனிமைப்படுத்தபட்டு எந்த நேரமும் அவசரப் பணிகளுக்கு வருவதற்கு அவர்களுக்குரிய தலைமை இடத்திலேயே தயாராக இருக்க வேண்டும். ஆனால் அவர்களை நிர்வாகம் திட்டமிட்டு வேலை வாங்கிட தீர்மானித்தது. யாருமே வீட்டை விட்டு வெளியே வர கூடாது என்றும் மீறினால் நடவடிக்கையும், வழக்கும் போடப்படும் என்று மத்திய- மாநில அரசுகள் அறிவித்த பிறகும் ரயில்வே இஞ்சினியரிங் தொழிலாளர்கள் வேலைக்கு கண்டிப்பாக வரவழைக்க பட்டார்கள். நிர்வாகத்திற்கு பயந்து போக்குவரத்து வசதிகளின்றி, டூவிலரிலும் சைக்கிளிலும் வந்தவர்களை ஊரடங்கு உத்தரவு களை மீறியதற்காகவும் அடையாள அட்டை இல்லாமலும் பலர் மீது அரசு வழக்கு பதிவு செய்தும் வாகனங்கள் பறிக்கப்பட்டும் பல சிரமங்களுக்கு இடையே வேலைக்கு வந்தார்கள்.

CTE /சென்னையின் உத்தரவை இஞ்சினியரிங் அதிகாரிகள் மீறி இஞ்சினியரிங் தொழிலாளர்களை கூட்டம் கூட்டமாகவும், நெருக்கமாகவும், முகக்கவசம் கையுறை போன்ற பாதுகாப்பு சாதனங்கள் இல்லாமலும் வேலை வாங்கினார்கள். தண்டவாள சரக்கு வண்டியிலிருந்து தண்டவாளங்களை கூட்டமாக சேர்ந்து இறக்குவது, கேட்டுகளை திறந்து பராமரிப்பது, பேக்கிங் மிஷின் மூலம் தண்டவாள பராமரிப்பு வேலைகளை செய்வது, தண்டவாளங்கள் ஸ்லீப்பர்களை மாற்றுவது போன்ற கூட்டு வேலைகளை வாங்கினார்கள். மேலே குறிப்பிட்ட வேலைகள் அனைத்தும் தனியாக செய்யும் வேலையில்லை. எல்லோரும் கூட்டாக தான் அந்த வேலைகளை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.. அதோடு குடிநீர் தட்டுப்பாடு காரணமாக கிடைத்த குடிநீரை அனைவரும் சேர்ந்து குடித்து கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி வேலை செய்தார்கள் என்பது வேதனையான விஷயமாகும்.

இந்த கொடுமையான வேலைகளை ஆட்சியர், காவல்துறை கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகும் எந்த மாநில அதிகாரிகளும் தலையிடவில்லை. சில அதிகாரிகள் தலையிட்டு ரயில்வே அதிகாரிகளிடம் பேசிய போது, "அவசரமான வேலை ஒரு நாள் மட்டுமே என்ற பொய்களை சொல்லி சமாளித்து மீண்டும் வேலைகளை வாங்கினார்கள். தற்சமயம் ஊரடங்கினால் ரயில்வேயில் காண்ட்ராக்ட் வேலைகள் நடப்பதில்லை. மேலே செய்யபட்ட வேலைகள் காண்ட்ராக்ட் வேலைகள்தான். காண்ட்ராக்ட்டர் செய்யும் வேலைகளை நிர்வாகத்தின் ஊழியர்களை வைத்து செய்வதன் மூலம் ஒரு பெருங் கொள்ளையும் நடைபெற வாய்ப்புகள் அதிகம்.

ஊரடங்கு தொடரும் என்ற நிலை இருப்பதால் இஞ்சினியரிங் தொழிலாளர்களுக்கு முககவசம், கையுறை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு அவசர வேலை தவிர கூட்டான வேலைகள் நிறுத்தப்பட்டு தலைமை இடத்திலே தனியாக இருக்க வைக்க வேண்டும். உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும். கொரோனா பாதுகாப்பு விதிகள் இஞ்சினியரிங் தொழிலாளர்களுக்கு அமலாக்கப்படுவதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அதை மாநில அரசு அதிகாரிகள், ஆட்சியர், காவல்துறை கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் ரயில் நின்றாலும் இஞ்சினியரிங் தொழிலாளர்கள் மூலமாக ரயில்வே ஊழியர்களுக் கும், அவர்கள் மூலமாக நண்பர்கள் குடும்ப உறவுகளுக்கும் கொரோனா பரவுவது ஒரு பெரிய நெட் ஒர்க்காக மாறி மிகப்பெரிய உயிர் சேதாரத்தை உருவாக்கி விடும்என்று எச்சரிக்க கடமைபட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.