கரூர், மே 11- ஊரடங்கு உள்ள நிலையில் வெளிமாநிலங்களில் தங்கியிருப்பவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு ஈ-பாஸ் மூலம் விண்ணப்பித்துச் செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கி தகவல் தொழில்நுட்பம் மற்றும் செவிலியர் படிப்பு பயின்று வரும் கேரள மாநிலம் கோட்டயம் மற்றும் திருச்சூரைச் சேர்ந்த 24 பேர் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து ஈ-பாஸ் வாங்கிக் கொண்டு கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் சதீஷ் (35) என்பவரை வரவழைத்து ஆம்னி பேருந்தில் கேரளா சென்றனர். சம்பவத்தன்று காலை கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம்நகர் பிரிவு பகுதியில் வந்த போது எதிரே கரூரில் இருந்து ராம்நகருக்கு தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரி மீது பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியதில் பேருந்தை ஓட்டி வந்த சதீஷ் படுகாயமடைந்தார். மற்ற 24 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வெங்கமேடு காவல்துறையினர், அனைவரையும் மீட்டு கரூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் லேசான காயமடைந்தவர்கள் அனைவரையும் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் சதீஷை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.