tamilnadu

ஆபாசப்படம் எடுத்து பாலியல் வன்கொடுமை; ஆதராங்களை அழித்த காசியின் தந்தை கைது

நாகர்கோவில், ஜூலை.1- குமரி மாவட்டம் கணேசபுரம் பகுதியை சேர்ந்த காசி மீது சமூக வலைத்தளங்கள் மூலமாக இளம்பெண்களை தொடர்புகொண்டு காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனியாக இருப்பதை ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  அதையொட்டி பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் அளித்த புகாரில்  காசி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து நான்கு பெண்களும் ஒரு இளைஞரும் கொடுத்த புகாரில், ஒரு போக்சோ வழக்கு 2 பாலியல் பலாத்கார வழக்கு, ஒரு கந்துவட்டி வழக்கு என ஆறு வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டது.  இதனிடையே காசி குண்டர் சட்டத்தில் கைதானார். மேலும் இந்த வழக்குகள் சிபிசிஐடி காவல் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர்  காசியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காசியின் சிபிசிஐடி காவல்  முடிந்ததை தொடர்ந்து காசி மற்றும் அவரது நண்பர் டைசன் ஜினோ ஆகியோர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். காசியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட மெமரி கார்டு, மொபைல் போன் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் காவல் துறையினர் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். காசியிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் மெமரி கார்டு போன்றவற்றை ஆய்வு செய்த சைபர் கிரைம் காவல் துறையினர் அதில் இருந்து ஏராளமான ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணையில் இந்த ஆதாரங்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தனது மகனை காப்பாற்றும் நோக்கில் சாட்சியங்களை அழித்ததாக சிபிசிஐடி காவல் துறையினர் செவ்வாயன்று காசியின் தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.