அருமனை, ஆக.21- பேச்சிப்பாறை அணையின் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் குடியிருந்த 46 வீடுகள் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு வலுக்கட்டாயமாக இடித்து அகற்றப்பட்டன. இதற்காக அதிக அளவிலான காவல்துறை யினரை குவித்து குடியிருப்பாளர்கள் அச்சுறு த்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை அருகே சீரோ பாயிண்ட் என்ற இடத்தில் 50ஆண்டுகளுக்குமேல் 46குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலை யில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பேச்சிப் பாறை அணையின் விரிவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.61 கோடியே 30 லட்சம் செலவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற கூடுதலாக புதியதாக கட்டப்பட்டுள்ள மதகு பகுதியில் அமைந்துள்ள 46வீடுகளை இடிக்க வருவாய் துறை சார்பில் கடந்த ஒரு வருடங் களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த பகுதி மக்கள் மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தருமாறு வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதைத் தொடர்ந்து மாற்று இடம் வழங்கி வீடுகள் கட்டிய பிறகு வீடுகள் இடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள எட்டு வீடு களை மட்டுமே இடித்து மாற்று இடத்தில் வீடுகள் வழங்ககோரியும் பாதிப்பில்லாத மேடான மற்ற பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கக் கூடாது என்றும் அங்குள்ள மக்களும் அனைத்து கட்சியினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும் வலியுறுத்தினர். ஞாயிறன்று (ஆக.18) நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்த குமார் மற்றும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். புதனன்று காலை 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்ட னர். பின்னர் பொக்லைன் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் 46 வீடுகளும் இடிக்கப் பட்டன. வீடுகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை அகற்ற முடியாமல் சோகத்தோடு மக்கள் தவித்தனர். பிற்பகலில் பெய்த பலத்த மழையில் நனைந்தபடி வேறு எங்கும் செல்ல வழில்லாமல் வெட்ட வெளியில் அதே பகுதி யில் தங்கியுள்ளனர். மாலையில் அப்பகுதியில் கூடாரம் அமைத்து கஞ்சிகாய்த்து குடித்தனர். குழந்தைகளும் முதியோர்களும் கடும் குளிரிலும் மழையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே பேச்சிப்பாறை சமத்துவ புரத்துக்கு பின்பகுதியில் சானலை ஒட்டியுள்ள பள்ளத்தில் குடியிருப்புகளுக்கான இடம் ஒதுக்க ப்பட்டுள்ளதாகவும் வீடுகளை இழந்தவர்கள் அங்கு செல்லுமாறும் வருவாய் துறையினரும் பொதுப்பணித்துறையினரும் அறிவுறுத்தினர்.
பொருத்தமான இடத்தில் மாற்று வீடு தருக
தமிழக அரசு வலுக்கட்டாயமாக வீடு களை இடித்து மக்களை நடுத்தெருவில் நிறுத்தி யுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணை அருகில் மக்கள் குடியிருந்த வீடுகளை தமிழக அரசு வலுக்கட்டாயமாக இடித்து மக்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இங்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்பின் மூலம் வரி வசூலிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மின் இணைப்பு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. அணை சீரமைப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்கிடையில் அந்த மக்களுக்கு பொருத்தமான இடத்தில் அரசே மாற்று வீடுகள் கட்டி கொடுத்திருக்க முடியும். அதிகார பலத்தால் மக்களை எப்போது வேண்டு மானாலும் அகற்றிவிடலாம் என்கிற சிந்தனையே இந்த மக்களை நடுத்தெருவில் நிறுத்த காரண மாகும். இது அனைவருக்கும் வீடு என்பது குறித்த உலகளாவிய சிந்தனைக்கு மாறானது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த மக்களுக்கு குடியிருப்பதற்கான மாற்று ஏற்பாட்டை செய்து கொடுப்பதுடன் குடியிருக்க தகுதியான இடத்தை கண்டறிந்து உடனடியாக அரசே வீடுகள் கட்டித்தர வேண்டும் என தெரிவித்துள்ளார். (rந.நி.)