tamilnadu

img

ஒரு பருவ மீன் பிடி தடைக்காலம் நிறைவு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயார்

நாகர்கோவில், ஜூன் 13- கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் பருவ காலங்களில் விசைப்படகுகளில்  மீன் பிடிப்பதற்கு, ஆண்டுதோறும் 61 நாள்கள் தடை விதிக்கப்படுகிறது. இந்த மீன்பிடி தடை காலம், குமரியில் 2 பருவங்களாக கடைபிடிக்கப்படுகிறது. கன்னியாகுமரி, சின்னமுட்டம் உள்ளிட்ட கிழக்கு கடலோரபகுதியில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. மேற்கு கடற்கரை பகுதியான ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், இனயம், தூத்தூர், நீரோடி உள்ளிட்ட பகுதிகளில், மே 31ஆம் தேதி நள்ளிரவு முதல் தடை அமலுக்கு வந்துள்ளது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு, தற்போது 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். முதல் பருவ தடை காலம்,  ஜூன் 15 ஆம் தேதி நிறைவடைகிறது. கடந்த இரு மாத தடை காலத்தில், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை நங்கூரமிட்டு, பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், மீன் வலைகளை பின்னுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், தடை காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுவதால், விசைப்படகுகளை தயார் செய்யும் இறுதி கட்ட பணிகளில் சின்ன முட்டம் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். வழக்கம் போல், அதிகாலை 5 மணிக்கு விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல உள்ளதால், மீன்களை பதப்படுத்தும் ஐஸ், எரிபொருள் நிரப்புதல் போன்ற பணிகளில் தீவிரம் காட்டியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு, கரை திரும்பியதும், சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகம் வியாபாரிகள் கூட்டத்தால் களை கட்டும். இங்கு கிடைக்கும் மீன்களை வாங்க கேரள மாநிலம் மற்றும் நெல்லை, குமரி மாவட்ட மீன் வியாபாரிகள் குவிவார்கள். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மீன்வரத்து அதிகமாக இருக்கும் என்றும், மீனுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலும் விசைப்படகு உரிமையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே சுமார் 4.4 மீட்டர் உயரம் வரை கடல் அலைகள் எழும் என்பதால், ஜூன் 14 ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.