நாகர்கோவில், ஆக.19- கன்னியாகுமரி மாவட்டத்தில் மாகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை மறுப்பை கண்டித்தும், சட்டத்தின்படியான வேலை அல்லது சம்பளம் வழங்ககோரி மண் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 55 வயதுக்கு மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தொற்று எளிதில் பாதிக்கும் எனக்கூறி மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு மாதங்களாக வேலை வழங்க மறுத்து வருகிறது. இதனால் பள்ளம், பறக்கை, குமரன்குடி, அருவிக்கரை, தெள்ளாந்தி மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான ஏழைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம், பலமுறை மனு கொடுத்துள்ளனர். அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், வேலை அல்லது ஊதியத்தை நிவாரணமாக வழங்க மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி புதனன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலைவிளைபாசி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.குமரேசன், சி.திருசிற்றம்பலம், எம்.சாகுல்ஹமீது, எஸ்.மிக்கேல்நாயகி, சிவதாணு, லெட்சுமி, விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.