பயணக்குறிப்பு
இரவு முழுவதும் அடுத்தநாள் ஆச்சரியத்துக்குக் காத்துக்கொண்டிருந்தேன். இந்தக் கனவுடன் கூடிய காத்திருப்புத்தான் வழக்கமான விமானப் பயணிகளுக்கு ஏற்படும் ஜெட் லாகிங் என்கிற விஷயம். அதாவது இந்தியாவிலிருந்து கனடா போன பிறகு நமது உடல் பகல் இரவுக் குழப்பத்திற்கு ஆளாகி அங்கு பகலிலும் தூக்கம் வந்துவிடும். இரவில் விழித்திருக்க வேண்டியிருக்கும். இந்த ஜெட் லாகிங் எனக்கு ஏற்படாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. மகன் அருள்பாரதியின் நண்பர்கள் விநோத்குமார், விக்னேஷ் இருவரும் உடன் வர அருள்பாரதி, மருமகள் விஜய்தா, இணையர் ஹேமா சகிதம் ரிச்மாண்டு இரவுச் சந்தைக்குப் போவதாக முடிவானது. ஆசிய அளவில் மே மாதம் முதல் குறிப்பிட்ட மாதங்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் வாரம் தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் நடக்கிற இரவுச் சந்தை.
சந்தை என்றதும் எனக்குக் கூட்டேரிப்பட்டுச் சந்தைதான் ஞாபகத்திற்கு வந்தது. எனது சின்ன வயதில் சந்தை என்றதுமே கருவாட்டு வாசம் அடிக்க ஆரம்பித்துவிடும். மைலம் சந்தையில் ஆடு விற்பதும் வாங்குவதுமாக துண்டுகள் மூடி பேரங்கள் நடந்துகொண்டிருக்கும். தரகர்களின் பாடு படுகுஷாலாக இருக்கும். செஞ்சி சந்தை மாடுகள் விற்பனைக்குப் பேர் போனது. செஞ்சி சந்தையிலிருந்து எனது அம்மாவைப் பெத்த ஆயா முந்திரிப் பழம் பலாப் பழம் வாங்கி முந்தானையில் முடிந்து வருவார்கள். இது அப்படிப்பட்ட சந்தை அல்ல. தீவுத்திடல் மாதிரியான ஒரு இடத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் ரிச்மாண்டு னைட் மார்க்கெட். நுழைவாயிலில் இளம்வயது பெண்கள் “ஸ்கிப் த லைன்” (வரிசையைத் தவிருங்கள்) என்று கூவிக் கூவி இருபத்து எட்டு டாலர் மதிப்பிலான கூப்பன்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நிற்காமல் உள்ளே போவதற்கு ஆறு பேருக்கான அல்லது ஒருவருக்கு ஆறு வாரத்திற்கான டிக்கட்டுகள்தாம் அவை. அதை வாங்கினாலும் வரிசையில் செல்ல வேண்டியிருந்தது. ஏராளமானோர் கார்களில் வருகிறார்கள். விதவிதமான கடைகள். வேடிக்கைக் காட்சிகள். மங்காத்தா வகையறா கட்டத்தில் காசு வைத்துப் பொருள்களை எடுத்துக் கொள்ளுதல். கூடைப் பந்துகள் எறிந்து கோல் போட்டால் இத்தனை டாலர்கள். காய்கள் எறிந்து பலூன்கள் உடைத்தல். துப்பாக்கிச் சுடுதல். வளையங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் கழுத்தில் மாட்டி எடுத்தல். குழந்தைகளுக்கான நீர் விளையாட்டுத் திடல்கள். இத்யாதி. இத்யாதி.
இதையெல்லாவற்றையும் விட வேறொரு விஷயம்தான் அங்கே மிக முக்கியமாக நடந்துகொண்டிருந்தது. அதுதான் உணவுச் சந்தை. ஆசியாவில் இருக்கும் அத்தனை உணவு வகைகளும் விற்பனைக்கு வந்திருந்தன. ஃபோர்க் முதல் பீஃப் வரை ஆக்டோபஸ் முதல் அத்தனை வகையான மாமிச வகை உணவுகளும் அங்கேயே சுடச் சுடச் செய்து தரப்பட்டன. மரக்கறி வகையெனில் மக்காச் சோளமும், தர்பூசணி, பைனாப்பிள் பழரசங்களும் ஐஸ் கிரீம்களும்தாம். சீன, ஜப்பான் நாட்டு உணவு வகைகள்தாம் ஏராளம். அனைவரும் கூட்டம் கூட்டமாகவோ, கும்பல் கும்பலாகவோ அல்லது குடும்பம் குடும்பமாகவோ மிகவும் மகிழ்ச்சிகரமாக உணவு அருந்திக்கொண்டே பேசிக் களித்துக் கொண்டிருந்தனர். எங்கெங்கும் வண்ணமயமான விளக்குகள். டிரம்ஸ் இசை நடத்திக் கொண்டிருந்த கனடா நாட்டு மாஸ்டர் டிரம்ஸ் சிவமணி போல ஒரு சிறுவன் டிரம்ஸ் வாசித்து அசத்திக் கொண்டிருந்தான். ஜோடி ஜோடியாகக் காதலர்கள். அது வண்ணமயமான விழாக் கோலம். அந்த இரவுச் சந்தை ஒரு பகலைப் போலக் காட்சியளித்துக்கொண்டிருந்தது. இன்னும் என்னென்னவோ விளையாட்டுகள். ஒருபுறம் குழந்தைகளுக்கான நீச்சல் குளம். இன்னொரு புறம் பெரிய குகை போல் வாயைத் திறக்கும் டைனோசர். அங்கும் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் போல விதவிதமாக நடந்து கொண்டிருந்தன. மனம் சொர்க்கத்துக்குள் புகுந்தது போலத் திணறியது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது புரிய ஆரம்பித்தது. அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். வாழ்வில் மகிழ்ச்சியின் எல்லையை விஸ்தரிக்கிறார்கள். குழந்தைகளுக்குச் சின்ன வயதிலேயே அவர்களின் மகிழ்ச்சியை அடையாளம் காட்டுகிறார்கள். நத்தை, நண்டு, மீன் வகைகள், அத்தனை வகையான அசைவ உணவுகளையும் ருசிக்கத் தருகிறார்கள்.
ஆக்டோபஸ் உணவுதான் அங்கே மிகவும் சிலாகிக்கப்பட்ட உணவாக நிறைய பேர்கள் அந்த உணவகத்தையே அதிகம் சுற்றிச் சுற்றி வந்தார்கள். என் மகனும் நண்பர்களும் என் மருமகளுக்குத் தெரியாமல் அங்கே சென்று அடிக்கடி எட்டிப் பார்த்து வந்தார்கள். மருமகள், டேய், ஆக்டோபசுக்குத்தானே அலையுறீங்க என்று கிண்டலடிக்க, சீ .இல்ல என்று என் மகன் சொன்னதும் எனக்குச் சிரிப்பைத்தான் வரவழைத்தது. நினைத்துக் கொண்டேன். நல்லவேளை ஆக்டோபஸ் எந்த நாட்டின் புனிதச் சின்னமாக அறிவிக்கப் படவில்லை. மாட்டுக்கறி வைத்திருந்தார் என்கிற ஊர்ஜிதம் செய்யப்படாத செய்தியே ஓர் உயிர் சர்வ சாதாரணமாகப் பறிக்கப் படுகிறது. ஆனால், ரிச்மாண்டு இரவுச் சந்தையில் மனிதனைத் தவிர அத்தனைக் கறிகளும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் துணிச்சலாக உண்ண முடிந்தது. முழுவதுமாக இரவு கவ்விக்கொண்டது. வண்ண விளக்குகளின் சாம்ராஜ்ஜியம் கண்களைக் கவர்ந்தது. எல்லோருமே அங்கே சக்கரவர்த்திகளைப்போலத் திரிந்து கொண்டிருந்தார்கள். அந்த இரவுச் சந்தையில் விலை கொடுக்காமல் வாங்கிய எத்தனையோ விஷயங்களை எழுத்தில் வடித்துவிட முடியாது.
வயிறு புடைத்து விட்டது. வெளியேறத் தயாராகிவிட்டோம். நுழைவாயிலில் வருகிறபோது “ஸ்கிப் த லைன்” (வரிசையைத் தவிருங்கள்) என்று கூவிக் கூவி இருபத்து எட்டு டாலர் மதிப்பிலான கூப்பன்களை விற்றுக் கொண்டிருந்த இளவயதுப் பெண்களும் ஆண்களும் மிகவும் சோர்ந்து போய்க் காணப்பட்டார்கள். சென்னையிலிருந்து திண்டிவனம் போகிறபோது வழியில் சுங்கச் சாவடிகளில் வேர்க்கடலை, நாவல் பழம், வெள்ளரிப் பிஞ்சுகள் ஏந்தியபடி வருகிற ஆண் பெண்களின் முகச் சாயல்களும் மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் முறுக்குப் பொட்டலங்களைக் கையில் ஏந்தியபடி பேருந்தைத் தொடர்ந்து ஓடிவருகிற சிவப்பு உடை மனிதர்தகளின் சாயல்களும் அந்த இளம் ஆண் பெண்களின் முகங்களில் பார்க்க முடிந்தது. மனிதர்கள் வண்ணங்களில் வேறுபட்டிருக்கலாம். வறுமையின் சாயல்கள் ஒன்று போல் இருந்தன. வாழ்க்கை அவர்களை இப்படியொரு பணச் சேமிப்புக்கான வழியைத் திறந்து வைத்திருந்தது. இரவுச் சந்தையிலிருந்து திரும்பிவிட்டோம். அவர்களைத் திரும்பி பார்க்கும் திராணி எனக்கில்லை.
-பயணிப்போம்