சிதம்பரம், ஜூன் 22- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரத்தில் நாச்சேரிகுளம், ஓமக்குளம், இளமையாக்கினார்குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் கோடை வெய்யிலின் தாக்கத்தால் தண்ணீர் வற்றிப் போனது. பெரிய குளமான நாகச்சேரி குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கிடக்கிறது. குளம் வற்றியுள்ள இந்த நேரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை எடுக்க அரசு முயற்சி எடுக்காது. எனவே தன்னார்வலர்கள், பொது மக்கள் என அனைவரும் முன் வரவேண்டும் என்று கடந்த 19ஆம் தேதி தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜூன் 22) சிதம்பரம் நகரத்தில் உள்ள டைமிங் ஹெல்ப் என்ற அமைப்பின் தலைவர் வினோத் தலைமையில் தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து நாகச்சேரி குளத்தில் இருந்த 200 கிலோவுக்கு மேலுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர். ஞாயிற்று கிழமையும் இந்த பணிகள் தொடரும் என்று கூறியுள்ளனர். இவர்களின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.