tamilnadu

மதிப்பெண் கணக்கிட விடைத்தாள்களை  பள்ளிகள் ஒப்படைத்தன

கடலூர், ஜூன் 24- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தினால் தமிழகம் முழுவதும் மேல்நிலை, இடைநிலை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 10ஆம் வகுப்பு மாணவர்கள்  அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண், வருகைப் பதிவேட்டை கணக்கிட்டு மொத்த  மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், 10ஆம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவேடு கல்வித்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விடைத்தாள் களையும் கல்வித்துறை கோரியது.  அதன்படி, கடலூர் மாவட்டத்தில் 18,341  மாணவர்கள், 17,205  மாணவிகள் என மொத்தம் 35,546 பேர்  இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்ததால் அவர்களின் விடைத்தாள்களை கடலூர், விருத்தாசலம், வடலூர், சிதம்பரம் ஆகிய கல்வி மாவட்டத்தின் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் அரசு, தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கினர். தற்போது வரை 90 விழுக்காடு பள்ளிகள் வழங்கி விட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் சனிக்கிழமைக்குள் அனைத்து பள்ளிகளும் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.