tamilnadu

சிதம்பரம் நகராட்சியில் வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சிதம்பரம்,செப்.28- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சுரேந்தர்ஷா,  நகராட்சி பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் கன மழையால் வெள்ளம் பாதிக்கும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் உடனுக்குடன் செய்ய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.  மேலும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் நகராட்சி பகுதியில் போர்கால அடிப்படையில் மேற்கொள்ள மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டது.  சிதம்பரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களுடன் தமிழ்நாடு குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஒருங்கிணைந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கூட்டத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அசோக் பிரசன்னா உதவி பொறியாளர்கள் கார்த்தி, கவிதா. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மஞ்சு,  கால்நடை உதவி மருத்துவர் அபிராமி,  காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணவேணி உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து பேசினார்கள். இதனைத்தொடர்ந்து முதல்கட்ட பணியாக சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட சோழன் பணிமனை அருகே வடிகால் வாய்க்காலில் அடைத்துள்ள ஆகாயத்தாமரை செடியை அகற்றும் பணி நடைபெற்றது.