tamilnadu

img

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்

சிதம்பரம், பிப்.20- கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு  சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சுத்தமான  குடிநீர் கிடைப்பது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் வாங்கி வந்தனர்.  இந்நிலையில்  தலைமை மருத்துவர் தமிழரசன், நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, குடிநீர் நிலையம் அமைத்து தரவேண்டும் என நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்திற்கு கோரிக்கை மனு அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து,  என்எல்சி நிறுவனம் மருத்துவமனையில் ஆய்வு செய்தது. பின்னர் ரூ.12.2 லட்சம் மதிப்பில், மணிக்கு 1000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைத்து கொடுத்தது. இந்நிலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய துவக்க நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவர் அசோக் பாஸ்கர் தலைமை வகித்தார். சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன், துறையின் பொது மேலாளர் மோகன், சமூக ஆர்வலர் இளங்கோவன் ஆகியோர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துவக்கிவைத்தனர்.   மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டதை பொதுமக்களும் நோயாளிகளும் பாராட்டு தெரிவித்தனர்.