tamilnadu

அண்ணாமலைநகர் பகுதியில் 2 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சிதம்பரம், மே 23- அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் ( எ) செந்தமிழ்ச்செல்வன் (32). அண்ணாமலைநகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாபு (எ) மர்டர்பாபு  (37). இவர்கள் இருவரும்  கடந்த மார்ச் 18ஆம் தேதி சிவபுரி அருகே  சிதம்பரம்  கீழ வீதியைச் சேர்ந்த கண்ணன்  என்பவரை  வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் செயின் மற்றும் 2,500 ரூபாயை பறித்துச் சென்றனர்.  இதுகுறித்து கண்ணன் அண்ணாமலை நகர் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி செந்தமிழ்செல்வன், மர்டர் பாபு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க  கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.