திருநெல்வேலி, ஜூன் 11- குற்றாலத்தில் காலதாமதமாக சாரல் மழை பொழிந்து சீசன் துவங்கிய நிலையில் மெயின்அருவியிலும் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புகழ்பெற்ற குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் பயணிகள் குளித்து மகிழ்வது வழக்கம். சிற்றருவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டது.அங்கு இந்த ஆண்டு சீசன் குறிப்பிட்டபடி ஜூன் 1ம் தேதி துவங்கவில்லை. கேரளாவில் பருவ மழை துவங்கினால்தான் குற்றா லத்தில் தென்மேற்கு பருவமழையாக உள்ள சாரல் மழை பெய்து சீசன் துவங்கும். தற்போது 2நாட்களாக மாலையில் பொதிகை மலையை சுற்றி மழை மேக கூட்டங்கள் உலா வந்து சாரல் மழையை பொழிந்தது. இதனால் ஐந்தருவியில் தண்ணீர் விழுந்த நிலையில் முக்கிய அருவியான மெயின் அருவியில் தண்ணீர் விழாமல் இருந்தது. இந்நிலையில் திங்களன்று மாலை முதல் மெயின்அருவியிலும் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தண்ணீரின் வரத்து நேரம் ஆக ஆக அதிகரித்ததால் இரவில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும் தண்ணீர் குறைந்ததை அடுத்து செவ்வாய்கிழமை அதிகாலை முதல் சுற்றுலா பயணி கள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப் பட்டனர்.