tamilnadu

img

நம்பிக்கையோடு இருங்கள்! - S.ராமகிருஷ்ணன்

கொரோனா தாக்குதல் காரணமாக நாடு மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவர்களும் மருத்துவமனை பணியாளர்களும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எனது மனம் நிரம்பிய நன்றி. இது போலவே ஊடகத்துறையினர் மிகுந்த பொறுப்புணர்வோடு செய்திகளை வழங்குகிறார்கள். அவர்களுக்கும் நன்றி.

கொரோனா தொற்றுநோய் குறித்த பயம் நம் அனைவரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளது. குறிப்பாக வயதானவர்கள். ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த மனஅழுத்தம் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பயம் அவர்களின் நோய் கூறை அதிகமாக்கிவிடுகிறது.

அவர்களுக்கு ஒன்று சொல்வேன். பயம் வேண்டாம். நம்பிக்கையோடு இருங்கள். மகிழ்ச்சியான உங்களை வாழ்க்கை அப்படியே தொடரும். உங்கள் மீது அன்பு செலுத்துகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் உங்களைச் சிறப்பாகப் பாதுகாப்பார்கள்.

நன்றாக உறங்குங்கள். நன்றாக உண்ணுங்கள். வீண் கவலைகளை அகற்றி மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் தூக்கம் முக்கியம். ஆழ்ந்து உறங்குங்கள். உறங்க முடியாதபடி தேவையற்ற எண்ணங்கள் அலைக்கழிப்புக் கொள்வதாக இருந்தால் பதற்றமோ பயமோ கொள்ள வேண்டாம். சில நிமிஷங்களில் இந்த மனநிலை தானே மாறிவிடும். தேவைப்பட்டால் தண்ணீர் குடியுங்கள். அல்லது ஆழ்ந்து உறங்க முடியும் என உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள். அது பலன் தரக்கூடியது.

இரண்டாம் உலகப்போரின் போது நாசிகளின் படுகொலை முகாமில் கூட மக்கள் ஆழ்ந்து உறங்கினார்கள். எந்த நம்பிக்கை இந்த உறக்கத்தைக் கொண்டு வந்தது என அவர்களிடம் கேட்டபோது நாளை நிச்சயம் நல்ல நாளாக இருக்கும் என்ற நம்பிக்கை தான் என்று பலரும் சொன்னார்கள். அந்த நம்பிக்கை பலரையும் உயிர்வாழச் செய்தது.

மரணத்தினை எதிர்கொள்ளும் கைதிகளாக இருந்த பெண்கள் தங்களுக்குள்ளாக இரவில் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒரு நாவலை வாசித்தார்கள். கதைகேட்டு உறங்கிப் போனார்கள்.

அவர்களுக்குச் சிகிச்சை அளித்த விக்டர் பிராங்கல் என்ற மருத்துவர் சொல்கிறார். நெருக்கடி நிலையின் போது உங்கள் உடலும் மனமும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு உங்களைக் காப்பாற்றும். உங்கள் உடலை பற்றி நீங்கள் அறிந்துள்ளது குறைவே.

உங்களுக்கு இந்த வாழ்க்கை எவ்வளவு நாள் அளிக்கப்பட்டிருக்கிறதோ அத்தனை நாட்கள் நிச்சயம் வாழ்ந்தே தீருவீர்கள். அதில் மாற்றமேயில்லை. அதை எந்தச் சக்தியாலும் தடுக்க இயலாது. ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்

குழந்தைகளை நம்பிக்கையோடு இரு எனச் சொன்னால் அவர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. கதைகள் சொல்ல வேண்டும். உண்மையான மனிதர்களின் வாழ்க்கையை உதாரணமாகச் சொல்ல வேண்டும். அதைவிடவும் வீட்டு மனிதர் எவரையாவது சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே தான் பெரியவர்களுக்கும்.

இயற்கை பேரிடர்கள். நெருக்கடிகளின் போது பெரியவர்கள் எளிதாக வதந்திகளை, பொய்களை நம்பிவிடுகிறார்கள். அதிலும் சமூக ஊடகங்களில் பரவி வரும் பொய்களை ஒரு போதும் நம்பவேண்டாம். சென்னை வெள்ளத்தின் போது இளைஞர்கள் இதே சமூக ஊடகத்தைக் கொண்டு நம்பிக்கையை உருவாக்கினார்கள். அது தான் இப்போதும் தேவை.

ஒவ்வொரு பகுதியிலும் அந்தப்பகுதியில் என்ன கடைகள் திறந்திருக்கின்றன. எந்தப் பெட்ரோல் பங்க். இயங்குகிறது. எந்தக் கடையில் என்ன கிடைக்கிறது. என்ற தகவல்களை வாட்ஸபில் தொடர்ந்து பதிவேற்றுங்கள்.

அது போலவே அவசர உதவி தேவை என்றால் அழைக்கவும் எனத் தன்னார்வ தொண்டர்கள் தங்களின் தொலைபேசி எண்களைத் தரவும்.

எல்லா ஊடகங்களும் இதற்கெனத் தனியாகப் பத்து தொலைபேசி எண்களை உடனடியாக ஒதுக்கி மக்களைக் கொரோனா பயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும்.

அதே நேரம் கொரோனா தானே என்ற அலட்சியம் வேண்டாம். இந்த வைரஸ் குறித்த செய்திகள் அச்சப்பட வேண்டியவை தான். ஆனால் பெரும்பீதி அடையத் தேவையற்றவை.

உங்கள் வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள் இருந்தால் அவர்களுக்குச் சூழ்நிலை பற்றிப் புரிய வையுங்கள். அவர்களுடன் சேர்ந்து கதை கவிதை படியுங்கள். அவர்களை அச்சப்படுத்திவிட வேண்டாம்.

உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொண்டவராக இருந்தால் உங்களின் ஒருநாளைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். புதிய விஷயங்களில் மனதைச் செலுத்துங்கள். கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பதைத் தவிருங்கள். விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவதே நேரத்தை கடந்து செல்ல எளிய வழி.

எதையும் படிக்க முடியவில்லை. சினிமா பாட்டு கூடக் கேட்க முடியவில்லை எனப் பலரும் புலம்புகிறார்கள். அது உண்மை. அது போன்ற தருணத்தில் கட்டாயமாகப் படிக்கவோ படம் பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம். இசை கேட்பது மனதை ஆற்றுப்படுத்தும். மிகச்சிறந்த இசையைக் கேளுங்கள்.

தொடர்பு அறுந்து போய்விட்டது என நினைக்கும் நண்பர்களை இந்தத் தருணத்தில் தேடி அழைத்துப் பேசுங்கள். பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது தான் நம்பிக்கையை உருவாக்குவதில் சிறந்த வழி.

புத்தரின் நண்பராக இருந்த அனந்தபிண்டிகன் என்பவர் நோயுற்ற நேரத்தில் புத்தர் தனது சீடரான சாரி புத்திரரை அனுப்பி அவரது நோயிலிருந்த குணப்படுத்த உதவுங்கள் என்றார். சார்பில் நோயாளி அருகில் போய் அமர்ந்து அவர் செய்த நற்செயல்கள். அவரது நற்குணங்கள். சந்தோஷமான நாட்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். அனந்தபிண்டிகனின் மனது நம்பிக்கை கொண்டது. நோயின் வலி குறைவதாக உணர்ந்தார். சந்தோஷமான நினைவுகள். சந்தோஷமான உரையாடல்களே சிறந்த மருந்து. நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மாத்திரைகள் மருந்துகள் ஒருபுறம் என்றால் மறுபுறம் உங்கள் நம்பிக்கை தான் உங்களைக் காப்பாற்றும்

பெரும் போரின் அழிவிலிருந்து ஏராளமான மக்கள் உயிர்பிழைத்தார்கள். ஹிரோஷிமா அணுஆயுத அழிவிலிருந்து மீண்டவர்கள் ஏராளம். இப்படிப் பேரழிவுகள் ஏற்பட்ட காலத்திலும் மனிதர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. உறுதியான மனதுடன் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலுடன் இருந்தார்கள். முடிவில் நெருக்கடியை வென்றார்கள். அது தான் நமக்கும் தேவை.

பெண்களுக்கு இந்த மனதைரியம் இயல்பாகவே உண்டு. ஆகவே அவர்களின் உறுதுணை உங்களை நிச்சயம் காப்பாற்றும். அதே நேரம் பெண்களை இந்த நெருக்கடியிலும் கடுமையாக வீட்டுப்பணிகளைச் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம். அவர்களின் ஆரோக்கியம் முக்கியம்.

செய்திகளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க பலருக்கும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனைகள் உருவாகிறது. ஆகவே தேவைப்படும் போது மட்டும் செய்திகளைக் காணுங்கள்.

உங்களின் நலன் கருதும் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயம் உங்களுக்கான நல்லதே செய்வார்கள். மருத்துவர்கள் உங்களைக் காப்பாற்றுவார்கள். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று

நம்பிக்கை வையுங்கள்

இந்த நெருக்கடியான சூழலை வெற்றிகரமாகக் கடந்து செல்வோம் என உறுதியாக நம்புங்கள்

நிச்சயம் நாம் மகிழ்ச்சியான உலகினை தொடருவோம்

நம்புங்கள். தைரியமாக இருங்கள். நல்லதே நடக்கும்..