tamilnadu

img

கீதம் பாடும் பாதம் - நவகவி

சாதம் வடிக்கும் கையி ரண்டில்
சங்கக் கொடியை ஏந்தும் உங்கள்
      பாதம் எழுப்பும் நாதம்
      பாத கத்தை மோதும்.

"சங்க"நாத கர்ஜ னை முன்
சிங்க நாதம் தோற்றுப் போகும்
      ஜனநாயகப் பெண்ணே.
      தாவிச் செல்க முன்னே.

கீதை காட்டும் பாதை என்பார்
போதை காட்டும் பாதை தானே
      அமைச்சர் காட்டும் பாதை!
      அறிந்து கொள்க சூதை.

குழவி என்றும் குமரி என்றும்
கிழவி என்றும் பேத மில்லை.
      வல்லுறவா வாழ்க்கை?
      வீழ்த்து இந்த போக்கை.

திலகப் பொட்டை நெற்றிக் கண்ணாய்
திறக்கும் காலம் பெண்ணே இது
      கலகம் செய்யும் காலம்.
      உலகம் எழுச்சிக் கோலம்.

பட்டுப் பாதம் அல்ல அல்ல
பாறைப் பாதம் இது இதென்னும்
      நடைப்பயணம் இதுதான்.
      படைப் பயணமும் இதுதான்!

தேர் வருகுது என்று உன்னை
சித்தரிக்கும் காலம் போச்சு.
      போர் வருகுது என்று
      போற்றும் காலம் இன்று!

ஓங்கிய கை முஷ்டியிலே
சிணுங்கு கின்ற வளையலிலே
      ஓங்காரப்பே ரோசை
      ஊற்றெ டுக்க ஆசை!

குடிபோதைத் தந்தை காலை,
அடிவாங்கும் தாயின் காலை,
      குழந்தை கட்டி அழவோ?
      தினமும் வீட்டில் இழவோ?

முறையு மில்லை; வரையு மில்லை.
அப்பன் சீண்டல்; கதறும் பிள்ளை.   
      கயமை, கொடுமை,தொல்லை.
      ஏது இதற்கு எல்லை?

கணினி யோடு கையை பழக்கி,
காற்றில், வானில் ஊர்தி செலுத்தி,
      காசுகள் பெற் றோமே.
      கவுரவம் பெற் றோமா?

பதுமைப்பெண்ணாய் இருந்தால் போதும்
புதுமைப்பெண்ணாய் இருந்தால் ஏசும்!
      சமூகப் பொது புத்தி.
      சாய்க்கணும் நம் சக்தி.

விடிவுக்குக் தவம் இருத்தல் மடமை.
விடிய வைக்கணும் நாமே பொழுதை.
      ஞானப்பெண்ணே எழுக.
      வானப்  பெண்ணாய் வருக!

பாதப் புண்ணைத் தாங்கிக் கொண்டோம்
இதயப் புண்ணை ஏற்க மாட்டோம்.
      விரைந்து செல்கபெண்ணே.
      வெற்றி அதோ முன்னே!

கோட்டை என்ன பெரிய கோட்டை?
குனிய வைக்கும் சங்கச் சாட்டை!
      சேற்றில் உழன்ற காலே
      செல்க செல்க மேலே!

வாட்டும் வெயிலை மழையை விடவும்
காட்டு தர்பார் அரசின் கொடுமை
      மோசம் என்று அறிவோம்.
      முற்றுகை இதோ இடுவோம்!