tamilnadu

img

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை வழக்கு: சிபிஎம் மனு விசாரணைக்கு ஏற்பு

தூத்துக்குடி, ஜூலை 9 - சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ்,  பென்னிக்ஸ், சித்ரவதை செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகம் மட்டு மின்றி இந்தியா முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  இந்த வழக்கை தானாக விசாரணைக்கு எடுத்து கொண்டு மேற்பார்வை செய்து வந்ததுடன் பல்வேறு பாராட்டத்தக்க உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.  ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரில் யாராவது  ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கிடவேண்டும், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களுக்கு மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக நீதிமன்றம் வகுக்கும் விதிமுறைகளை தமிழக அரசும், காவல்துறையும் , சிறைத்துறையும் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் ஜுன் 29 அன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  ரிட் மனு தாக்கல் செய்தார். 

இந்த ரிட் மனு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் எல்.ஷாஜிசெல்லன், டி.சீனி வாசராகவன், எஸ்.எம்.மோகன்காந்தி, இ.சுப்புமுத்து ராமலிங்கம் ஆகியோர் ஆஜராகினர். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் மருத்துவ தகுதி சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக மாதிரி வழிகாட்டிடும் விதிகளை தாக்கல் செய்ய வழக்கறி ஞர்களுக்கு அனுமதி வழங்கியது. மேலும் சிபிஎம்மின் மனுவிற்கு தமிழக அரசு பதில் தாக்கல் செய்திட உத்தரவிட்டது. மேலும் சாத்தான்குளம் காவல்நிலைய மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் மேற்கொண்டு வருகின்ற வழக்கில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்திடவும் உத்தரவிட்டது. 

சாத்தான்குளம் காவல்நிலைய படுகொலை நடந்த பிறகு 23.06.2020 அன்று முதன்முதலாக சாத்தான்குளத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையிலான குழுவினர் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அன்றே மேற்படி வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும், தொடர்புடைய சிசிடிவி பதிவுகளையும் கைப்பற்றி சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கட்சியின் மாவட்டச் செயலாளர் உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பி வைத்தார். மேலும் ஜுன் 24 அன்று  திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்த போது கே.எஸ்.அர்ச்சுனன் தலைமையிலான குழுவினர் சென்றனர்.  

மேலும் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மேற்கொண்ட விசாரணையிலும் ஜுன் 29 அன்று  கே.எஸ்.அர்ச்சுனன் ஆஜராகி சாட்சியமளிக்க மனுக் கொடுத்துள்ளார். அவருக்கு அழைப்பாணை நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான் ஜெயராஜ், பென்னிக்சின் குடும்பத்தினரும் நீதித்துறை நடுவரிடம் சாட்சியமளித்தனர். 

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு சார்பில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும்  கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட போது அவரை அவமரியாதை செய்த  காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. ஜுலை 6 அன்று கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாத்தான்குளத்திற்கு நேரில் வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அது சமயம் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி பென்னிக்சின் சகோதரி பெர்சியிடம் தொலைபேசி மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்தார். 

தற்பொழுது மேற்படி காவல்நிலைய இரட்டை படுகொலை வழக்கில் செவ்வாயன்று மத்திய புலனாய்வு பிரிவு முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்து, மேல்விசாரணை செய்ய இருக்கின்ற நிலையில் இதுபோன்று தமிழகத்தில் இனியும் ஒரு மனித உரிமை மீறல் படுகொலை நடைபெறாத வண்ணம் தடுத்து நிறுத்தும் வகையில் சாத்தான்குளம் வழக்கில் சட்டப்படி போலீசாருக்கு தண்டனை கிடைத்திடுவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளது.