tamilnadu

img

கொரானோ: அப்பளம் உற்பத்தி முடங்கியது உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் தவிப்பு


கொரோனோ அச்சத்தால் மதுரையில் குடிசைத் தொழிலாக நடைபெற்று வந்த அப்பள உற்பத்தி முடங்கியது. இதனால்  உற்பத்தியாளர்களும் இந்தத் தொழிலை நம்பியுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  அப்பள தொழில் நிறுவனங்கள் உள்ளன.  சுமார் ஒரு லட்சம்  பேர் ஆண்கள் மற்றும் பெண்கள் பணியாற்றிவந்தனர். இவர்களில் ஆண்களைவிட பெண்களே அதிகம்.

 மதுரையில் சிந்தாமணி, சாமந்தம், அனுப்பானடி ஆகிய பகுதிகளில் 75 சதவீத அப்பள நிறுவனங்களும் வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம் பகுதிகளில் 25 சதவீத நிறுவனங்களும் இயங்கிவந்தன,  கொரோனா அச்சத்தால் சிறு-குறு தொழில்களை மூட மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டதால் அவை தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட அப்பளங்களை  சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமலும் பணி செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும் உற்பத்தியாளர்கள் தவித்து வருகின்றனர். 
இது குறித்து அப்பளம் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்  அணில் அப்பளம் உரிமையாளர்  கே.எஸ். ராஜா கூறுகையில், அப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்  உற்பத்தி செய்யும் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலியை வாரம் வாரம் பெற்றுக்கொள்வார்கள்.  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அப்பளத் தொழிலாளர்கள்,   உற்பத்தியாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தியாளர்  சங்கங்கள் மூலமாக  தொழிலாளர்களுக்கு  ஒரு சிறு ஊதியம் வழங்குவதற்கு முயற்சித்தோம்.  ஆனால் அது பலனளிக்கவில்லை.  ஏனெனில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள் தேங்கியுள்ளதால் பண வரவு இல்லை.  வங்கிகள் அப்பளத் தொழிலுக்கு கடன் தருவதில்லை. உற்பத்தி செய்யப்பட்ட அப்பளம் சந்தைக்குச் சென்றால் மட்டுமே பண வரவு இருக்கும் என்ற நிலையில் ஊழியர்களுக்கு தற்போது பணம் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அப்பளத் தொழிலாளர்களை பாதுகாக்க  மாற்று ஏற்பாடு செய்துதர வேண்டுமென்றார்.  மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் சீனிவாசா அப்பள உற்பத்தி நிறுவன உரிமையாளர் சீனிவாசன் கூறுகையில், கொரோனா-வால் உற்பத்திப் பொருள்களை கொண்டு செல்வதில்  சிரமம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வெளி மாவட்டத்தில் தான் அதிக விற்பனை உள்ளது. தற்போது வரை ரூ. 10 லட்சம்  மதிப்பிலான அப்பளத்தை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது அரசு அறிவித்ததை நாங்கள் செய்து வருகிறோம். விற்பனை முடக்கத்தை ஈடுசெய்ய அரசு உற்பத்தியாளர்களுக்கு என்ன செய்யப் போகிறது என்றார்.
-ஜெ.பொன்மாறன்.