tamilnadu

img

ஆறுகளில் வனம்போல் வளர்ந்துள்ள சீமைகருவேல மரங்கள்: புதிய தடுப்பணைகள் அமைக்க விவசாயிகள் கோரிக்கை

ஆறுகளில் சீமைகருவேல மரங்கள் வனம்போன்று வளர்ந்து நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ளன. அவற்றை அகற்றி, ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொசஸ்தலை ஆறு
திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறு. கொசஸ்தலை ஆறு வட ஆற்காட்டை நீர்பிடிப்புப் பகுதியாக கொண்டது. இதன் மொத்த நீளம் 136 கி.மீ. சென்னை நகருக்குள் 16 கி.மீ. ஓடும் இந்த ஆறு ஆந்திரத்தின் கிருஷ்ணாபுரம் தொடங்கி வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக, பூண்டி நீர்த் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து திருவள்ளூர், சென்னை வழியாக ஓடி எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது. தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூர் அருகே சீமாபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டுகள் மூலம் பாசனத்திற்கும் பயன்படுகிறது. இந்த ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதி 3 ஆயிரத்து 757 சதுர கி.மீ., ஆற்றுப் படுக்கையின் அகலம் 150 முதல் 250 மீட்டர் வரை உள்ளது. ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு வினாடிக்கு 1,25,000 கன அடி. சராசரி கொள்ளளவு 1,10,000 கன அடியாகும். இந்த ஆற்றின் குறுக்கே திருக்கண்டலம் எல்லையில் கட்டிய தடுப்பணை திறப்பு விழா காணும் முன்பே உடைந்ததால், புதிய அணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரணி ஆறு
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்ணித் மலை பகுதியில் துவங்கும் ஆரணி ஆறு பிச்சாட்டூர் அணையை கடந்து தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக லட்சுமிபுரம் அணைக்கட்டை அடைந்து அதன் வழியாக பழவேற்காடு பகுதியில் வங்கக்கடல் கலக்கிறது. ஆரணி ஆற்றின் மொத்த நீளம் 114.8 கி.மீ. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 4,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஆரணி ஆற்றில் லட்சுமிபுரம், பாலீஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தலா 5,000 கனஅடி தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடியும், இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவை பொறுத்து 7 முதல் 12 டிஎம்சி வரை கடலில் கலக்கிறது. இந்த நிலையில் ஆரணி ஆற்றில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளையால், ஆறு கட்டாந்தரையானது. அந்த இடங்களை இளைஞர்கள் விளையாடும் மைதானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பூமியில் உப்புநீர் அதிகரித்து வருவதால் மூன்று போகம் விளைந்த நிலத்தில் தற்போது ஒரு போகம் பயிர் செய்வதே கடினமாக இருப்பதாக விவசாயிகள் வேதனையுடன்  தெரிவிக்கின்றனர்.

பராமரிப்பு இல்லாத அணைக்கட்டு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜி.சம்பத், மாவட்டச்செயலாளர் பி.துளசிநாராயணன், துணைத் தலைவர் கவுன்சிலர் பி.ரவி ஆகியோர் கூறுகையில், “பொன்னேரியில் உள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு பராமரிப்பு இல்லாததால் தற்போது தடுப்பு சுவர்களில் செடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டு உள்ளது. நீர் வெளியேற்றும் கால்வாயில் பாறைகள் சரிந்து கிடக்கின்றன. இதனால் மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அணைக்கட்டு இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் இரண்டு ஆறுகள் முழுவதும் சீமை கருவேல மரங்கள் முளைத்து காடுகளாக மாறிவிட்டன. இதனால் மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டு கரை உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் கிராமங்களில் புகும் அபாயம் உள்ளது. கருவேல மரங்களை முழுவதும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

ஆழ்துளை கிணறு
ஆற்றின் கரையோரம் உள்ள நகர மக்கள் ஆறுகளில் கழிவுகள், குப்பைகளை கொட்டுவதோடு, கழிவுநீரை விடுகின்றனர்.இதனால் ஆறுகள் மாசுபடுகின்றன. நீர் வரத்து துணைக் கால்வாய்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால், நீரோட்டம் தடைப்பட்டு ஊருக்குள் பெருவெள்ளம் பாயும் ஆபத்து உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். பருவமழை தீவிரம் அடைவதற்கு முன்பாக தமிழக அரசு, ஆறுகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் வகையில் இரு ஆறுகளிலும் போதிய தடுப்பணைகள் கட்ட வேண்டும், ஆற்றின் நடுவே மழைநீரை சேகரிக்கும் வகையில் நூறு அடிக்கு ஒரு ஆழ்துளைகிணறு அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பெ.ரூபன்