கொரோனோ வைரஸ் நோய் பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனி மருத்துவமனை மதுரையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த ஓராண்டுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, நரம்பியல் மருத்துவம், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கொரோனோ சிகிச்சைக்கான தனி மருத்துவமனைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது
சென்னை வேலூர் திருச்சிராப்பள்ளியில் கொரோனோ சிகிச்சை மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதுரையில் செயல்பட்டுவந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொரோனோ சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
இங்கு செயல்பட்டுவந்த நான்கு சிகிச்சை பிரிவுகளும் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு திங்கட்கிழமை இரவு மாற்றப்பட்டன. அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கெனவே கொரோனோ நோயாளிகளுக்கான தனி வார்டு உள்ளது. அதில் எட்டு படுக்கைகள் உள்ளன. மேலும் பத்து படுக்கைகளுடன் தனி வார்டும் அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரையை அடுத்த ஆஸ்டின் பட்டியில் உள்ள காசநோய் மருத்துவமனையிலும் கொரோனோ வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 400 படுக்கைகளுடன் கொரோனோ சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.