tamilnadu

img

தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு கொரோனா தொற்று

ஈரோடு, மார்ச் 23- தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், கோவையில் கடந்த வாரம் உயிரிழந்த தாய்லாந்து நாட்டைச்சேர்ந்தவருக்கும் இவர்களுக்கும் தொடர்பில்லை, சிறுநீரக பாதிப்பால் தான் அவர் உயிரிழந்தார் என ட்விட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டிலிருந்து தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுலா விசாவில் வந்த குழுவில் உள்ள இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் தனிப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களு டைய இரத்த மாதிரிகள் சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்ததில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு, தொடர்ந்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.