tamilnadu

img

கொரோனா தொற்று:தனியார் பள்ளிகள் கட்டண வசூலை மூன்று மாதங்களுக்குத் தள்ளிவைக்க வேண்டும்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கொரோனா தொற்றின் சமூகப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஏப்ரல் 14 வரையிலான முழு அடைப்பு சுமுகமாக நடைபெற மத்திய, மாநில அரசுகளும் மக்களுக்கு உரிய வசதிகளை செய்துதரவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவது கவலையளிக்கிறது. இதன் சமூக பரவலைக் கட்டுப்படுத்த எச்சரிக்கையோடும் விழிப்புணர்வோடும் இருந்து கட்டுப்பாடு காக்க வேண்டிய நேரம் இது. எனவே அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஏற்று தமிழக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

21 நாள் முழு அடைப்பு வெற்றி பெற வேண்டுமெனில் மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரணங்கள் மக்களை சரியாகச் சென்றடைய வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடைய நலனுக்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. இவற்றைக் கவனத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் அடுத்த ஆண்டுக்கான கட்டணத்தை முன்கூட்டியே கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. வங்கிகளில் கடன் தவணைகளை ஒத்திவைத்துள்ள நிலையில் தனியார் பள்ளிகள் கட்டண வசூலில் ஈடுபடுவது முறையல்ல. எனவே தனியார் பள்ளிகளின் கட்டண வசூலை மூன்று மாதங்களுக்குத் தள்ளி வைக்குமாறு தமிழகக் கல்வித்துறை அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர்,
வசிக்க.
 

;