கவனம், எச்சரிக்கை தேவை: அமைச்சர்
சென்னை, மார்ச் 12- உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் தமிழகத்தில் இல்லை என்றும் பொதுமக்கள் மிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து தமிழக சட்டப்பேரவையில் வியாழனன்று(மார்ச் 12) கேள்வி நேரத்திற்கு பிறகு, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு தீர்மானத்தின் மீது பேசிய உறுப்பினர்கள் சரவணன்(திமுக), பரமசிவம் (அதிமுக) கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை தடுக்க வேண்டும், முக கவச தட்டுப்பாட்டை போக்க வேண்டும், ரேசன் கடைகளில் கூடகொடுக்கலாம், பேருந்து போக்குவரத்தில் நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதில் விளக்கம் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “கொரோனா வைரஸ் வேகத்தைக் காட்டிலும் வதந்திகளின் வேகம் அதிகமாகவே இருப்பதால் எந்த சூழ்நிலையிலும் பொதுமக்கள் பதற்றமோ, பீதியோ அடையத்தேவையில்லை. வாட்ஸ் ஆப், சமூக வலைத் தளங்களில் வரும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம். மக்கள் நல்வாழ்த்துறை தினமும் வெளியிடும் அறிக்கைகளை மட்டுமே நம்பவேண்டும்” என்றார். சீனாவின் ஊகான் மாகாணத்தில் கொரோனா தாக்கம் ஏற்பட்டது ஜனவரி மாதம் 2ஆவது வாரமாகும். இந்த தொற்று நோயை குணப்படுத்துவதற்கான குறிப்பிட்ட மருந்து உலகில் எங்கும் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும், தமிழகத்தில் முன்கூட்டியே மாநில அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காஞ்சிபுரம் பொறியாளர் வேகமாக குணமடைய செய்தது. மருத்துவமனையில் இருந்து மிக விரைவில் வீடு திரும்ப உள்ளார் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது இல்லை. ஆனாலும், நமக்கு மிகப்பெரிய சவால் என்னவென்றால் சென்னை விமான நிலையத்திற்கு தினசரி 55க்கும் அதிகமான விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 8,500 பேர் வருகிறார்கள். அவர்களுக்கு இருமல், காய்ச்சல், மூச்சு திணறல் இருக்கிறதா? என்பதை நமது மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் பாதுகாப்பு கவசங்களுடன் எந்த நேரமும் கண்காணித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு விமான நிலையங்களில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா பாதித்த சீனா, தென்கொரியா, ஈரான்,இத்தாலி, மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ்,சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் அத்தனை பயணிகளையும் விமான நிலையத்தில் இருந்து உடனடியாக வெளியில் செல்ல அனுமதி மறுத்துள்ளோம். இதுவரைக்கும் 1,450 பேர் மட்டுமே வெளியில் சென்றுள்ளார்கள். அவர்களும் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். எதாவது பிரச்சனை என்றால் உடனே சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் கூறினார்.
கட்டுக்குள் சீனா...
முதன் முதலாக தொற்றுநோய் பரவிய சீனாவில் அரசு எடுத்த துரித நடவடிக்கை, கண்காணிப்பு, சிகிச்சையால் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகம் பாதித்த ஊகான் மாகாணத்திற்கு நேரில் சென்ற அந்நாட்டு பிரதமர் அதை உறுதி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
சிறப்பு மையம்
பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளுக்கும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் வெயில் அதிகம் இருப்பதால் வைரஸ் பரவாது என்று கூறப்படுவது சரியான தகவல் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மிகவும் கவனமுடன் இருக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 10 லட்சம் முகக் கவசங்கள் கையிருப்பு உள்ளதோடு, தேவையான மருந்துகளும், மருத்துவ ஊழியர்களும் தயார்நிலையில் உள்ளது. சென்னை தாம்பரம், மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, தஞ்சை செங்கிப்பட்டியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.