tamilnadu

img

திருச்சி பெல் நிறுவனத்தில் சிஐடியுவினர் உரிமை மீட்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி,மே,2, பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் 38ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். திருச்சி பெல் நிறுவனத்தில் சுமார் 11,000 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் கொரோனா வைரஸ் பரவலை சாதகமாக பயன்படுத்தி பெல் ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்து பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குவது, 1 வருடத்திற்கு பஞ்சப்படி உயர்வு வழங்கப்படமாட்டது எனவும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தொழிற்சங்கங்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட பெர்க்ஸ் அலவன்சில், தொழிற்சங்கங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல்  சர்க்குலர் மூலம் 50சதவீதத்தை நிர்வாகம் தன்னிச்சையாக பிடித்தம் செய்துள்ளது. இந்த 50 சதவீதம் என்பது ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதம் ஆகும். இதனால் ஒவ்வொரு ஊழியருக்கும் மாதந்தோறும் ரூ 10,000 முதல் ரூ25,000 வரை ஊதிய இழப்பு ஏற்படும்.

எனவே நிர்வாகம் தன்னிச்சையாக அறிவித்த சர்குலரை திரும்பப்பெற வேண்டும். பெர்க்ஸ் அலவன்சில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை உடனே திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பெல் சிஐடியு சங்கம் சார்பில் உரிமை மீட்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வெள்ளியன்று பெல் சிஐடியுவினர் அவரவர் வீடுகளின் முன்  சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊதிய இழப்பை ஏற்படுத்தும் சர்குலரை திரும்பப்பெற வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட அலவன்சை உடனே திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட சிஐடியுவினர் கலந்து கொண்டனர்.