ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
மதுரை, பிப்.24- தேசிய குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மக்கள் விரோதச் சட்டங்களை அமல்படுத்துவதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், இந்தச் சட்டங்களை போராட்டத்தின் மூலம் முறியடித்தே தீருவோம் என மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார். மதுரையில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
தேசிய குடியுரிமை சட்டதிருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மக்கள் விரோதச் சட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள், தமிழகத்தில் திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சியினர், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், சிறுபான்மை மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படை யிலேயே இந்த மூன்று சட்டங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கு முன்னோடியாக விளங்குவது ஹிட்லரின் பாசிச ஜெர்மனியில் எடுக்கப்பட்ட முயற்சிகளே ஆகும். ஹிட்லரின் நடவடிக்கைக்கு உள்ளான ஜெர்மனி நாஜிக்களின் பாதிப்பிலிருந்து விடுபட 50 ஆண்டு கள் ஆனது. பாஜக-வின் குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவுக்கும் அதே பாதிப்புதான் ஏற்படும். ஜெர்மனியில் யூதர் சமூகத்தில் பிறந்தவரான ஆல்பர்ட் ஜன்ஸ்டைன் நாட்டைவிட்டு தப்பி அமெரிக்காவில் குடியேறினார். ஜன்ஸ்டைன் கொல்லப்பட்டிருந்தால் அறிவியல் வளர்ச்சியில் பெருமைமிகு பங்களிப்பை செலுத்திய ஒரு விஞ்ஞானியை உலகம் இழந்திருக்கும்.
கேரளம் வழிகாட்டுகிறது
குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென முதன் முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது கேரளத்தை ஆளும் இடதுஜனநாயக முன்னணி அரசுதான். மேலும் இந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய வற்றை நடத்தமாட்டோம் என பினராயி விஜயன் தலைமையிலான அரசு அறிவித்துவிட்டது. கேரளம், பாண்டிச்சேரி, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா, சிக்கிம் உள்ளிட்ட 13 மாநில அரசுகள் குடியுரிமை சட்டதிருத்தத்தை அமல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளன.
தமிழக அரசின் கபட நாடகம்
தமிழக அரசோ குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறது. மத்திய பாஜக அரசின் அடிமை களாகவே நடந்து கொள்கிறார்கள். குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களை காவல்துறை மூலம் ஒடுக்குகிறார்கள். தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதய குமார் குடியுரிமை சட்டதிருத்தத்திலுள்ள 21 கேள்வி களில் 10,13,14 கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ள தாகக் கூறுகிறார். இந்த நிலையில் வருகிற ஜூன் மாதம் தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக் கெடுப்பை நடத்தப் போவதாகக் தமிழக அரசு கூறுகிறது. குறிப்பாக அப்பா, அம்மா பிறந்த தேதி, பிறந்த ஊர், தாய்மொழி, ஆதார் அட்டை, செல்பேசி எண் ஆகியவை குறித்து கேட்கப்போவ தாக கூறப்படுகிறது. இது இதுவரை இல்லாத ஒன்று.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்கள் ஆதார் அட்டையின் விவரங்களுடன் ஒத்துப்போக வேண்டும். பின்னர் இந்த விவ ரங்கள் அனைத்தும் தனிநபரின் அடையாளம் குறித்த பயோமெட்ரிக் தரவுகளுடன் ஒத்துப் போகவேண்டும். இல்லையெனில், சம்பந்தப் பட்டவர்கள் “சந்தேகத்திற்குரியவர்கள்” என முத்திரை குத்தப்படுவர். பின்னர் அவர்களது குடியுரிமை பறிக்கப்படும். நாடற்றவர்கள் என அறிவிக்கப்படுவர். குறிப்பாக 1930-ஆம் ஆண்டுகளில் ஹிட்ல ரின் நாஜி படைகள் நாடுகளை ஆக்கிரமிக்க முயற்சித்தன. அப்போது மார்க்சிம் கார்க்கி, “எழுத்தாளர்களே, கவிஞர்களே, அரசியல்வாதி களே, மக்களே நீங்கள் பாசிசத்தின் பக்கமா? மக்களின் பக்கமா? என கேள்வியெழுப்பினார்.
அதே கேள்வியை இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எழுப்புகிறது. “அதிமுக, பாமக ஆதரவுடன் தமிழகத்தில் பாஜக அரசு மக்கள் விரோதச் சட்டங்களை அமல்படுத்தப்போகிறது. நீங்கள் பாசிச எண்ணம் கொண்ட பாஜக பக்கமா? மதச்சார்பின்மையை பாதுகாப்பவர்கள் பக்கமா? அதிமுகவும், பாமக-வும் ஆதரித்திருக்காவிட்டால் குடியுரிமைச்சட்டமே நிறைவேறியிருக்காது. மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். சட்டத்தை ஆதரித்த பாமக-வோ, கூட்டணி தர்மத்திற்காக ஆதரித்தோம் என்கிறது. குடியுரிமைச்சட்டத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அதிமுக தமிழக மக்களுக்கு வரலாற்று துரோகத்தை இழைத்துவிட்டது. இப்போது விளக்கம் கேட்கிறோம் என்ற பெயரில் எடப்பாடி அரசு கபடநாடகமாடுகிறது, புரிந்தும் புரியாதது போல் நடந்து கொள்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
டொனால்டு டிரம்ப் வருகை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வருகை குறித்து கருத்து தெரிவித்த ஜி.ராம கிருஷ்ணன், இரு நாடுகளின் உறவு, மக்கள் உறவு களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்க வில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகளை, வளர்ச்சியடைந்த நாடுகள் என்று கூறி ஏற்றுமதி பொருட்களுக்கு வரிவிதித்து இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்க நினைக்கின்றனர். ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்கா இந்தியாவின் பொருளாதாரத்தை சிதைக்க முயற்சிக்கிறது. அதனால் தான் டிரம்ப் திரும்பிச்செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்றார். பேட்டியின்போது மாநிலச்செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், ஏ.லாசர், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
நூல் வெளியீடு
முன்னதாக குடியுரிமை திருத்தச் சட்டமா? குடிகெடுக்கும் திட்டமா? என்ற நூல் மதுரையில் திங்களன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வெளியாகியுள்ள இந்த நூலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார். மதுரை ஐக்கிய ஜமாஅத் தலைவர் லியாகத்அலிகான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகி எஸ்.சேக் இப்ராஹிம், மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.முஹமது கௌஸ், ஐக்கிய ஜமாத் மதுரை மாவட்டத் துணைத்தலைவர் ஐ.ஜாஹிர்உசைன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.