தமிழகத்தின் தென்முனையாகிய குமரி மாவட்டம் முன்பு கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1957ல் தமிழ்நாட்டுடன் இணைந்ததற்கு முன்பும், பின்பும் கம்யூனிஸ்டுகளின் தீரமிக்க களப்போராட்ட வரலாறுகளைத் தாங்கிய பகுதியாகத் திகழ்வது அது. அத்தகைய போராட்டங்களில் கலந்துகொண்ட தோழர்களை ‘களப்பணியில் கம்யூனிஸ்டுகள்’ தொடரில் சந்தித்திருக்கிறோம். இன்னும் எழுதப்பட வேண்டிய பல தோழர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் தோழர் ஆர். வேலுக்குட்டி.விளவங்கோடு வட்டம் மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அள்ளிமூடு சிற்றூரில் ஒரு கூலித் தொழிலாளியின் மகனாக 1940ல் வேலுக்குட்டி பிறந்தார். பள்ளிப் படிப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இவர் எடேஷா என்ற தனியார் ரப்பர் தோட் டத்தில் 1958ல் கூலி வேலைக்குச் சேர்ந்தார். இவரோடு 90 பேர் வேலை செய்து வந்தனர். வேலைக்குச் சேர்ந்த 6வது மாதத்தில் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தார். அப்போது சங்கத்தின் தலைவர் லூயி தேவசகாயம். பொதுச்செயலாளர் தோழர் கிருஷ்ணன் (இன்றைய மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவனின் தந்தை). வேலுக்குட்டி வேலையில் சேர்ந்தபோது தினக்கூலி ரூ.2.00. 1968-ம் ஆண்டு இவர் சூப்பர்வைசரானார். மாதக் கூலி ரூ.100 கிடைத்தது. சுறுசுறுப்பாக சங்கப் பணியாற்றிய இவர் 1965ம் ஆண்டு சங்க நிர்வாகக்குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டம் 1965ம் ஆண்டு துவங்கியது. விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய மூன்று பகுதிகளும் போராட்டக்களமாக மாறின. போராட்டம் துவங்கிய சில நாட்களில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எம்.எம். அலி, திவாகரன், ஜே.ஹேமச்சந்திரன் ஆகியோர் இந்தியா - பாகிஸ்தான் யுத்தத்தையொட்டி கைது செய்யப்பட்டு (சண்டை வேண்டாம் என்று கட்சி சொன்னதற்காக அன்றைய அரசின் நடவடிக்கை!) சிறையில் அடைக்கப்பட்டார்கள்.தோட்ட முதலாளிகள் கூலியை உயர்த்திக் கொடுக்க மறுத்ததால் தொழிலாளர்களின் போராட்டம் நீடித்தது. உறுதியான போராட்டத்தை உடைக்க பி.கே.எம். தோட்ட முதலாளி கருங்காலிகளைத் தூண்டி விட்டார். தூண்டிவிடப்பட்ட கருங்காலிகள் போராட்ட உணர்வின் தூண்டுதலோடு களமிறங்கிய தொழிலாளர்களுடன் மோதினர். பிரச்சனையை கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் பெருமாள், கட்சித் தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான கொச்சிமணி (1977ல் சட்டமன்ற உறுப்பினர்) ஆகியோர் சென்றனர். அவர்களுடன் வேலுக்குட்டியும் சென்றார். தொழிலாளர்கள் கருங்காலிகளை ஓட ஓட விரட்டியிருக்கிறார்கள். வேலைநிறுத்தத்தை உடைக்க முயற்சித்த நிர்வாகம் தோல்வியடைந்தது. அன்று போராட்டக்களத்தில் கண்ட உணர்ச்சி மிகு காட்சியை உற்சாகம் ததும்ப வேலுக்குட்டி விளக்கினார்.போராட்டத்தை ஆதரித்து தோழர் பி.ராமமூர்த்தி உள்ளிட்டு பல தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னரும் முதலாளிகள் கூலி உயர்வு அளிக்க மறுத்ததால் போராட்டம் மூன்று மாதங்கள் நீடித்தது. போராட்டத்தை உடைக்க முதலாளிகள் எடுத்த முயற்சி தோல்வியடைந்த பின்னணியில் மாநில அரசு போராட்டத்தை தடைசெய்தது. காவல்துறையினர் தொழிலாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தினர். வேலுக்குட்டி உள்ளிட்ட பல தொழிலாளர்களும், தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எந்த ஒப்பந்தமும் இல்லாமல்போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.1965ம் ஆண்டு போராட்டம் துவங்குவதற்கு சில தினங்களுக்கு முன்னதாக சங்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய லூயி தேவசகாயம், “மாநில அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கும், போலீசார் போராட்டத்தை உடைக்க தொழிலாளர்களைத் தாக்கலாம். அப்படிப்பட்ட சூழல் வந்தால் நாம் உறுதியாக போராட்டத்தை நடத்த வேண்டும்,” என்று கூறினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்படி முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்க முடியும் என்று வேலுக்குட்டி மனதில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் போராட்டம் நடைபெற்ற போது, அரசும், காவல்துறையும் முதலாளிகளுக்கு ஆதரவாக நின்றதை வேலுக்குட்டி நேருக்கு நேர் கண்டு புரிந்து கொண்டார். “தொழிற்சங்கம் என்பது புரட்சிக்கான பயிற்சி பள்ளி” என ஒரு கட்சிக்கூட்டத்தில் பி.ராமமூர்த்தி அறிவுறுத்தியது நிரூபணமாகி விட்டது,” என நெகிழ்வோடு வேலுக்குட்டி குறிப்பிட்டார்.
1970ம் ஆண்டு எடேஷா கம்பெனியில் வேலையிலிருந்த வாட்ச்மேன் நிர்வாகத்தால் வேலைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொழிலாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினார்கள். நிர்வாகம் வாட்ச்மேனை வேலைக்கு சேர்க்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து கம்பெனி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் முன்னணிப்பாத்திரம் வகித்த வேலுக்குட்டி உள்ளிட்டு 13 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கு நிர்வாகம் நிலுவைத் தொகையைக் கூட வழங்கவில்லை. வேலுக்குட்டி உள்ளிட்டு ஆறு தொழிலாளர்களை கைது செய்து காவல்துறையினர் கிரிமினல் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் நீதிமன்றம் மூன்று மாதம் தண்டனை வழங்கியது. மேல்முறையீட்டில் வேலுக்குட்டி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டங்களில் முன்னணி பாத்திரம் வகித்த வேலுக்குட்டி சங்கத்தின் இணைச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். இப்பின்னணில் வேலுக்குட்டி சங்கத்தின் முழுநேர ஊழியரானார். சங்க நிர்வாகி என்ற அடிப்படையில் வேலுக்குட்டி எல்லா போராட்டங்களிலும் முக்கிய பங்காற்றினார். இப்போதும் ரப்பர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். தொழிலாளர் பிரச்சனைகளுக்காகமட்டமல்ல, அவருடைய சொந்த கிராமத்தில் மக்கள் கோரிக்கைகளுக்காகவும் மக்களைத் திரட்டி பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.அவர் கிராமத்திலிருந்து வெள்ளச்சிபாறை என்ற கிராமத்திற்கு சரியான பாதையில்லை. மக்களைத் திரட்டி 4 கிலோ மீட்டர் அளவிற்கு சாலையை கட்டியமைத்தார். சில நிலச்சுவான்தார்களின் தூண்டுதலினால் காவல்துறையினர் வேலுக்குட்டி உள்ளிட்ட 12 பேர் மீது கிரிமினல் வழக்கு தொடுத்தனர். 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற இவ்வழக்கில் அனைவரும் விடுதலையானார்கள். அடுத்து சில ஆண்டுகளில் அரசு நிர்வாகம் வேலுக்குட்டி முயற்சியின்பால் போடப்பட்ட சாலையை பஞ்சாயத்து சாலையாக்கியது.
வேலுக்குட்டிக்கு ஒரு மகன், ஒரு மகள். மகனுக்கு தோழர் ஜே.ஹேமச்சந்திரன் தலைமையிலும், மகளுக்கு தோழர் டி.மணி தலைமையிலும் திருமணம் நடைபெற்றது. இரண்டுமே சீர்திருத்த முறையில் நடந்த திருமணங்கள். வேலுக்குட்டியின் மகன் ரப்பர் தோட்டத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவரும் நமது கட்சி உறுப்பினர். மகள் கட்சி ஆதரவாளர். பல ஆண்டுகளுக்கு முன்பு வேலுக்குட்டியின் மனைவி இறந்துவிட்டார்.மாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நான்கு கிராமங்கள் உள்ளன. அந்த நான்கு கிராமங்களிலும் நமது கட்சிக் கிளைகள் உள்ளன. விவசாயிகள் சங்க அமைப்பும் உள்ளது. தோழர் வேலுக்குட்டியின் கிராமம் கேரள எல்லைக்கு அருகில் உள்ளது. வேலுக்குட்டி தேசாபிமானி வாங்குகிறார், படிக்கிறார். 1962ம் ஆண்டு கட்சி உறுப்பினரான வேலுக்குட்டி 1970ம் ஆண்டு கிளைச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது கட்சியின் இடைக்குழு உறுப்பினராக உள்ளார். சக தொழிலாளர்களுக்காகப் போராடிய தற்காக வேலை நீக்கம், ஊதிய வெட்டு, கைது, சிறை, வழக்கு என்ற தாக்குதல்களை எதிர்கொண்டவர் அவர். குடும்ப வாழ்க்கையில், அரசியலில், தொழிற்சங்க இயக்கத்தில் (வேலை நீக்கம் செய்யப்பட்ட போதும்) சோர்வில்லாமல் உறுதியாக கட்சிப்பணி, இயக்கப்பணி ஆற்றி வருபவர் தோழர் வேலுக்குட்டி. அடக்குமுறையினாலும், தேர்தல்களில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டபோதும் உற்சாகம் தளரவில்லை. மாறாக மேலும் மேலும் உறுதியோடு களமிறங்கினார். அவரைப் போன்றவர்கள் இயக்கத்தில் உயர்பொறுப்புகளுக்கு வராமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் இயக்கத்தின் வேர்களாகச் செயல்பட்டதாலும், செயல்படுவதாலும் குமரி மாவட்டத்தில் கட்சியும், தொழிற்சங்க இயக்கமும் துடிப்போடு இயங்கி வருகின்றன என்றால் மிகையில்லை. கடந்த அறுபது ஆண்டு காலமாக அர்ப்பணிப்போடு மக்கள் தொண்டில் ஈடுபட்டு வரும் வேலுகுட்டி இளம் தோழர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். தற்போது 79 வயதாகும் தோழர் வேலுக்குட்டியின் இயக்கப் பணி பாராட்டத்தக்கது. பின்பற்றத்தக்கது.