தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழக அரசு சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் 3 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக நூற்றுக்கணக்கானோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். ஆங்காங்கே 144 தடை உத்தரவை மீறியவர்களுக்கு போலீசார் தடியடி, மற்றும் நூதன முறையில் தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை அன்று தூத்துக்குடியில் அதிமுக வை சேர்ந்த பிரமுகர் பி. ஏ. ஆறுமுக நயினார் என்பவரின் ஏற்பாட்டின்பேரில் ராஜலட்சுமி கல்விக்குழுவும் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் இலவசமாக முக கவசம், சோப்புத் திரவம், சோப்பு உள்ளிட்டவற்றை வழங்கும் நிகழ்ச்சி அண்ணாநகர் 9-வது தெருவில் நடைபெற்றது.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் விழிப்புணர்வு என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்துவதற்கு தூத்துக்குடியில் அனுமதி அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவசமாக முக கவசம், சோப்பு திரவம் மற்றும் சோப்பு ஆகியவற்றை வழங்கினார்.
நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் முக பாதுகாப்பு கவசங்கள் எதுவும் இன்றியும் நின்றுகொண்டிருந்தனர். கொரோனா வைரஸ் பீதியால் தமிழகமே உறைந்த கிடக்கின்ற இந்த வேளையில் அதுபற்றிய சிறுதுளி பயமும் இன்றி பொதுமக்கள் அஜாக்கிரதையாக பொதுவெளியில் கூட்டமாக கூடி நின்றதும், விழிப்புணர்வு என்ற போர்வையில் மாவட்ட ஆட்சியரே அதை ஆதரித்து முகக் கவசங்கள் வழங்கி சென்றதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் கூறியதாவது
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் பொதுமக்கள் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில். தனியார் நிறுவன நிகழ்ச்சிக்கு காவல்துறை எதன் அடிப்படையில் அனுமதி வழங்கியது. பொதுமக்கள் 5 பேர் கூட கூடுவதற்கு அனுமதிக்காத காவல்துறை 200 பேர் கூடுவதற்கு எவ்வாறு அனுமதி அளித்தது ?
ஆளுங்கட்சி யை சேர்ந்தவர் என்பதால் அனுமதித்ததா ?
ஆளுங்கட்சி பிரமுகர் தலைமையில் நடைபெற்ற தனியார் நிறுவன நிகழ்ச்சியில் 144 தடை உத்தரவை மீறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறையினர் இருசக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும், அத்துமீறி வருபவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும் .அதற்கு பதிலாக லத்தியை கொண்டு பொதுமக்களை தாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும் .அதேபோல் 144 தடையை மீறி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அதிமுக வை சார்ந்த ஆறுமுகநயினார் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.என்றார்.