கடமலைக்குண்டு:
தேனி மாவட்டம் வருசநாடு அருகே தங்கம்மாள் புரம் கிராமத்தில் கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல் மற்றும் சதிக்கல் சிற்பத்திலுள்ள வீரனை நாட்டார் தெய்வமான மதுரை வீரனாக இப்பகுதி மக்கள்
வழிபட்டு வணங்கி வருகின்றனர். இது குறித்தவிபரம் வருமாறு:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அமைந்துள்ள சி.பி.ஏ.கல்லூரியின் முதல்வர்முனைவர் சு.சிவக்குமாரின் வழிகாட்டுதல்படி இக்கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சி.மாணிக்கராஜ், முனைவர் ஆ.மோகன்ராஜ் மற்றும் மாணவர் ராம்குமார்ஆகியோர் கொண்ட குழு தொல்லியல் சார்ந்தகளஆய்வுப் பணி செய்து வருகின்றனர். இவர்கள் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியரான மு.செல்வம் மற்றும் தொல்லியல் ஆர்வலர் ஞானசேகரன் ஆகியோருடன் இணைந்து வருசநாட்டிற்கு அருகேயுள்ளதங்கம்மாள்புரம் பகுதிகளில் கள மேற்பரப் பாய்வு செய்யும் போது கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படும் குதிரை வீரன் நடுகல் ஒன்றும் சதிக்கல் ஒன்றும் கண்டறிந்தனர்.இந்நடுகல் பற்றி முனைவர் சி.மாணிக்கராஜ் கூறுகையில், பிற்கால பாண்டியர்கள் காலத்தில் அழ நாட்டுப் பிரிவில் வருசைநாடு என்ற பெயரில் இப்பகுதி இருந்துள்ளது. இன்றைய வருசநாடு எனும் ஊருக்கு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்திலுள்ள அரசு மேல் நிலைப் பள்ளி அருகில் குதிரை வீரனின் வீரமரணத்திற்கு பின்பு அவன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் ஒன்று கலை அம்சத்துடன் உள்ளது.இதில் வீரன் ஒருவன் குதிரையின் மீது அமர்ந்துபோருக்குச் செல்வது போன்ற தோற்றத்தில்புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக் கின்றான். வீரன் தனது வலது கையிலுள்ள வாளை ஓங்கியபடியும், இடது கையில் குதிரையின் கடிவாளத்தை இழுத்துப்பிடித்த படியும்உள்ளான். குதிரை தனது முன்னங்கால்களை தூக்கி ஓடுவதற்கு தயார் நிலையிலிருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வீரனுக்கு வலப்பக்கக் கொண்டையும், காதணிகள், கழுத்தணிகளும் அணிவித்து அலங்கரிக்கப்பட்டுள்ளான். இக்குதிரை ஒருதளபதி அல்லது குறுநில மன்னனின் குதிரைபோல் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதால், இவ்வீரன் இப்பகுதியின் தளபதி அல்லது குறுநில மன்னனாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது.குதிரைக்கு முன்பு, வீரனின் இரு மனைவியர்களும், வீரனுக்கு கீழ் பணியாற்றிய இருவீரர்களும் வைசாகஸ்தானகம் எனும் நின்றகோலத்தில் புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டிருக்கின்றனர். இரு பெண்கள் தங்கள் வலதுகைகளை விஸ்மயா ஹஸ்தம் அமைதியில் வைத்து மங்களப் பொருள் ஒன்றை பிடித்தபடியுள்ளனர். இடதுகைகளை தொங்கவிட்டு அதில்வட்டமான சிறிய கண்ணாடியை பிடித்துள்ளனர்.இரு பெண்ணிற்கும் தமிழம் எனும் கொண்டைபோடப்பட்டுள்ளது. இரு பெண்களின் காதுகளில் பனை ஓலை சுருள் அணியான பத்திரிகுண்டலம் எனும் காதணிகள் உள்ளன. சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழும் பெண்கள் அணியும் தழையத் தழைய வடிவங்களுடைய பட்டாடை முன்கொசுவம் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாடையானது கால் பகுதியில் தாமரை மலர்போல் விரிந்த நிலையில் அழகாக காட்சியளிக்கிறது. குதிரை வீரனின் வீரமரணத்திற்கு பின்பு அவனின் இருமனைவியர்களும் சதி எனும் உடன்கட்டை ஏறிதங்கள் உயிரை மாய்த்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் சதிச்சிற்பமாக இப்பெண்களின் சிற்பம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண்ணின் வலது கால் அருகில் வீரன் ஒருவன் சிறிய சிற்பமாகவும் இதைப்போல் மற்றொரு பெண்ணின் வலது கால் அருகில் பெண் ஒருத்தியின் சிற்பம் சிறியதாகவும் காட்டப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து குதிரை வீரனின் கீழ் பணியாற்றிய இரண்டு வீரர்கள் குதிரை வீரனோடுபோரில் வீரமரணம் அடைந்ததின் நினைவாகஅவர்களுக்கு இங்கே சிற்பம் வெட்டப்பட்டுள் ளது. வீரர்களும் தங்கள் வலது கைகளில் வாள்பிடித்தபடியும் இடது கைகளை தொங்கவிட்டபடியும், வீரர்களுக்குரிய ஆடை ஆபரணங்களுடன் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள் ளனர். குதிரைக்கு பின்பக்கம் ஆறு வீரர்களின் சிற்பங்கள் உள்ளன. இதில் முதல் வீரன் ஒருவன் தனது வலது கையில் உள்ள ஒரு பொருளை,குதிரை வீரனை நோக்கி நீட்டியபடியுள்ளான். இதற்கு பின்பக்கம் சேவகன் ஒருவன் குதிரைவீரனின் வீரமரணத்தை கௌரவிக்கும் விதமாக குடைபிடித்துள்ளான். இதற்குப் பின்பு இரு சேவகர்கள் குதிரை வீரனுக்கு சாமரம் வீசுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு பின் இரு வீரர்கள் துப்பாக்கியை தங்களுடைய தோள்பட்டையில் தாங்கியபடி, தங்களுக்கு முன்னுள்ளவர்களை பின் தொடர்வது போல் உள்ளனர். இச்சிற்பக் காட்சிகள் மூலம் வீரமரணமடைந்த வீரனையும், அவன் மனைவியர் மற்றும்இரு வீரர்களையும் சிவலோகம் அல்லது சொர்க்கலோகம் அழைத்துச் செல்லும் முறைவிளக்கப்பட்டுள்ளது எனலாம்.
சதிக்கல்
இதே ஊரின் மேற்குப்பக்கம் ஓடும் மூலவைகை ஆற்றின் கரையில் சதிக்கல் ஒன்றும் கண்டறியப்பட்டது. இச்சதிக்கல்லில் வீரன் ஒருவன் தனது இரு மனைவியர்களுடன் பீடம் ஒன்றில் சுகாசன அமர்வில் அமர்ந்துள்ள காட்சியை புடைப்புசிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. வீரன் தனது வலது கையில் வாள் ஒன்றைபிடித்தும், இடது கையை இடது தொடையில்ஊன்றிய நிலையில் ஒரு வீரனுக்குரிய கம்பீரமான தோற்றவடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறார். குந்தளம் கொண்டை, நெரித்த புருவங்கள், உருட்டு விழிகள், முறுக்கிய மீசை, காதுகளில் குழை மற்றும் கழுத்தணிகள் காட்டப்பட்டுள்ளன. இடை முதல் கணுக்கால் வரைபட்டாடை அணிவிக்கப்பட்டுள்ளது. ஆடையின்கொசுவம் பீடத்தின் மீது வடிந்து தொங்குகிறது.காலில் தண்டை, சிலம்பு போன்ற அணிகலன்களும் உள்ளன.வீரனுக்கு வலப்பக்கமுள்ள பெண் தனது வலது கையை வலது தொடையில் வைத்தும்,இடது கையில் வட்டமான கண்ணாடி ஒன்றைபிடித்து அழகை பார்ப்பது போன்று காட்சியளிக்கிறார். குந்தளம் கொண்டை, காதில் குழை,காலில் தண்டை சிலம்பு மற்றும் கழுத்தணி அணிவிக்கப்பட்டுள்ளார். மேலாடையின்றி உள்ள இப்பெண்ணிற்கு துடி இடையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப்போல் வீரனுக்குஇடப்பக்கம் அமர்ந்துள்ள பெண் வலது கையில் கண்ணாடி பிடித்துள்ளார். இடதுகையை இடது தொடையில் ஊன்றியுள்ளார். தம்மில்லம்கொண்டை போல் உள்ளது. இடை துடி இடையாக உள்ளது. இரு பெண்களின் ஆடையின் கொசுவங்கள் பீடத்தின் மீது வடிந்து தொங்குகின்றன.இவ்வீரன் இப்பகுதியில் தளபதி அல்லதுகுறு நில மன்னனாக இருக்கலாம் அல்லதுசமூகத்தில் மதிப்புமிக்க உயர்ந்த நிலையில்வாழ்ந்தவராக இருக்கலாம். அவரின் மரணத் திற்குப் பின்பு இரு மனைவியர்களும் சதி எனும்உடன்கட்டை ஏறி தங்கள் உயிரை மாய்த்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் விதமாக சதிசெய்ததற்கான அடையாளங்களுடன் சிற்பமாகவெட்டப்பட்டுள்ளனர்.இப்பகுதி மக்கள் இக்குதிரை வீரன் நடுகல்லையும், சதிக்கல் சிற்பத்தில் உள்ள வீரனையும் நாட்டார் தெய்வமான மதுரை வீரனாக கருதிவணங்கி வருகின்றனர். வீரத்திற்கு சிறப்புபெற்ற வருசநாட்டுப் பகுதியில் இன்றளவும் தொல்லியல் சார்ந்த பொருள்கள் கிடைத்தவண்ணமும், இது போன்ற சிற்பத் தடயங்களும் அதிகளவில் உள்ளன. ஆகையால் இப்பகுதி தொன்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வரலாற்று உலகில் பார்க் கப்பட்டு வருகிறது. (ந.நி.)