tamilnadu

img

‘நான் எழுந்து நிற்கிறேன், பிறகு என்னைச் சுடு!’ - பெரணமல்லூர் சேகரன்

"நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட ஒரு கணமேனும் பற்றி எரிவதே மேல்”
 

                                                                                                                                                                                                                                                                                                          -சுகுமாறன் 

 

குவேராவின் குடும்பம் இடதுசாரி சார்பான குடும்பமாக இருந்ததால் மிக இளம் வயதிலேயே அரசியல் தொடர்பான பரந்த நோக்கு இவருக்குக் கிடைத்தது. இவரது தந்தை, சோச லிசத்தினதும், ஜுவான் பெரோனினதும் ஆதரவாளராக இருந்தார். இதனால், ஸ்பானிய உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட குடியரசு வாதிகள் இவர் வீட்டுக்கு அடிக்கடி வருவதுண்டு. இது சோசலிசம் பற்றிய இவரது கருத்துக்களுக்கு வழிகாட்டியது. வாழ்க்கை முழுவதும் இவரைப் பாதித்த ஆஸ்துமா நோய் இருந்தும் இவர் ஒரு சிறந்த விளையாட்டு வீரராக விளங்கி னார். சிறந்த “ரக்பி” விளையாட்டு வீரர். இவரது தாக்குதல் பாணி விளையாட்டு காரணமாக இவரை “பூசெர்” என்னும் பட்டப் பெயர் இட்டு அழைத்தனர். 

தனது தந்தையிடமிருந்து சதுரங்கம் விளையாடப் பழகிய சே குவேரா, 12 ஆவது வயதில் உள்ளூர் சுற்றுப் போட்டி களிலும் கலந்து கொண்டுள்ளார். வளர்ந்த பின்பும், பின்னர் வாழ்நாள் முழுவதும் இவர் கவிதைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். பாவ்லோ, நெரூடா, கீட்ஸ், மாச்சாடோ, லோர்க்கா, மிஸ்ட்ரல், வலேஜோ, விட்மன் ஆகியோரது ஆக்கங்கள் மீது இவருக்குச் சிறப்பு ஆர்வம் இருந்தது. குவேராவின் வீட்டில் 3000 நூல்களுக்கு மேல் இருந்தன. நூல்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்துக்கு இது ஒரு காரணம் எனலாம். இவற்றுள் மார்க்ஸ், போல்க்னர், கைடே, சல்காரி, வேர்னே போன்றவர்கள் எழுதிய நூல்களில் அவருக்குச் சிறப்பான ஆர்வம் இருந்தது. இவை தவிர நேரு, காப்கா,காமுஸ், லெனின் போன்றவர்களது நூல்களையும், ஏங்கெல்ஸ், வெல்ஸ், புரொஸ்ட் ஆகியோருடைய நூல்களையும் அவர் விரும்பி வாசித்தார். அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான குயிரோகா, அலெக்ரியா, இக்காசா, டாரியோ, ஆஸ்டூரியாஸ் போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள் புத்தர், அரிஸ்டாட்டில் பற்றிய ஆய்வுக் குறிப்புக்கள், பெட்ரண்ட் ரஸ்ஸலின் அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, ஜாக் லண்டனின் சமூகம் பற்றிய கருத்துக்கள், நீட்சேயின் இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பன வும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களா லும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.

மோட்டார் சைக்கிள் குறிப்புகள்

1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சே குவேரா, அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். பெரு நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த தொழு நோயாளர் குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்க ளைப் பயன்படுத்தி “மோட்டார் சைக்கிள் குறிப்புக்கள்” (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூயார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் விருதுகளை யும் பெற்றது. பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை லத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று  சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வு களுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், லத்தீன் அமெரிக்காவைத் தனித் தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியா கப் பார்த்தார். எல்லைகளற்ற ஹிஸ்பானிய அமெரிக்கா என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. அர்ஜெண்டினா வுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ பட்டம் பெற்றார்.

மீண்டும் பயணம்

1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை பொலிவியா, பெரு, ஈக்வடார், பனாமா, கோஸ்டாரிகா, நிகரகுவா, ஹேண்டூராஸ், எல் சால்வடார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான், நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சி யாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாதமாலாவி லேயே தங்கிவிட முடிவு செய்தார்.

‘சே’ என்றால்...

குவாதமாலா நகரில், சே குவேராவுக்கு ஹில்டா கடேயா அக்கொஸ்தா என்ற பெண் அறிமுகமானார். இவர் பெரு நாட்டைச் சேர்ந்த ஒரு பொருளியலாளரும், இடதுசாரிச் சார்புள்ள அமெரிக்க மக்கள் புரட்சிகர கூட்டமைப்பு என்னும் இயக்கத்தின் உறுப்பினரும் ஆவார். இதனால் அவருக்கு அரசியல் மட்டத்தில் நல்ல தொடர்புகள் இருந்தன. இவர் ஆர்பென்சின் அரசாங்கத்தின் பல உயரதிகாரிகளைச் சேகுவேராவுக்கு அறிமுகப்படுத்தினார். அத்துடன் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்களும், கியூபாவைவிட்டு வெளியேறி வாழ்ந்து வந்தவர்களுமான தொடர்புகளும் சே குவேராவுக்குக் கிடைத்தன. இக் காலத்தி லேயே “சே” என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட அர்ஜெண்டினச் சொல்லாகும்.

கியூபாவில் புரட்சி

சில காலத்திற்குப் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண் டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தி னைக் கைப்பற்றியது. அதன் பின்னர் கியூபாவின் மத்திய வங்கியின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார்.அக்காலகட்டத்தில் கொரில்லா போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தகங்களையும் எழுதியிருந்தார். 1964 டிசம்பர் 11ஆம் தேதியன்று கியூபாவின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவையின் 19 வது பொது அமர்வில் உரையாற்றி னார். பின்னர், காங்கோ-கின்ஸாசா (தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடு களின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பி னை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

பொலிவியாவில் சே 

சே, 1966ம் ஆண்டின் கடைசிகளில் கொரில்லாப் போரை வழி நடத்தும் பொருட்டு உருகுவே நாட்டு போலி பாஸ்போர்ட்டு டன் பொலிவியா நாட்டுக்குள் நுழைந்தார். பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு ராணுவத்தினது ராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். சிம்மசொப்பனமாக விளங்கிய சே, பொலிவிய ராணு வத்தால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் கேரி ப்ராடோ சால்மோன் என்பவரின் தலைமையில் அக்டோபர் 9, 1967 இல் கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட இப்படி சொல்லித்தான் மரணத்தை வரவேற்றார் சே:
 

“நான் எழுந்து நிற்கிறேன். பிறகு என்னைச் சுடு”
 

‘சே’ என்பது சாதாரண பெயர்ச்சொல் அல்ல, ஒரு இயக்கம், போராட்டக் குணமுள்ள மனிதர்களின் அடையாளம்.

 

இன்று (அக்டோபர் 9) (தோழர் சே குவேரா நினைவு நாள்)

;