tamilnadu

img

அரிதாரம் கலைந்து காற்றில் உதிரும் வெற்று வார்த்தைகள் -எஸ்.ஜி.ரமேஷ்பாபு

“பேசு ஏதாவது / பேசு எப்படியாவது / பேசு பேச்சு வாய்த்தபடி / பேசு பேச தோன்றியபடி / பேசு எல்லாம் மறந்து / பேசு எல்லாம் நினைத்து / இயல்வது பேசு / பேசிய பிற்பாடு என்னவாவது கிடைக்கும்” 

விக்ரமாதித்யன் கவிதையில் எழுது என்பதை பேசு என மாற்றியது மட்டுமே எமது பணி என்றறிக:

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிஜி அவர்களுக்கு வணக்கம்!

தாங்கள் நலமென அறிவேன். நாங்கள் நலமல்ல பிரதமரே, நோய் கிருமி பாதிப்புக்கு அஞ்சி வீட்டில் பல நட்களாய் முடங்கிக்கிடக்கிறோம். ஊரடங்கு வெற்றிக்கு பல காரணங்கள் உண்டெனினும் நோய் தொற்றை தனியார் மருத்துவ மணைகளில் ரூபாய் 4500 மட்டும் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம் என தாங்கள் கருணையோடு அறிவித்த அறிவிப்பும் ஒரு காரணம் எனபதை அறிக. இத்தொகை தினக்கூலிகளின் சரிபாதி மாத சம்பளம் என்பதை அறிவீரோ? இதை கூட சக்ரவர்த்தி அவர்களுக்கு நீதிமன்றமே எடுத்தியம்ப வேண்டிஇருந்தது. 

மிகவும் அக்கறையோடு பேசும் ஒப்பனைகளோடுதான் உங்கள் வார்த்தைகள் துவங்குகிறது. ஆனால் மிகைப்பூச்சு அரிதாரம் சிலநொடிக்குள் கலைந்து வெற்று வார்த்தைகளாக உதிர்ந்து காற்றில் விழுகின்றன. உங்கள் உரைகளைக் கேட்டுக் கேட்டு சோர்ந்துவிட்டோம். ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர். அதுவும் சரிபாதி மக்கள் அன்றாடம் வேலை செய்தால் மட்டுமே வாழ்க்கையை நடத்தும் ஒரு நாட்டில், அவர்கள் குறித்த எந்த அக்கறையும் இல்லாத உங்கள் வார்த்தை வரிசைகள் மிகவும் அயர்ச்சியை உருவாக்குகிறது. ஒருமைப்பாடு என்ற பெயரால் கைதட்ட சொல்வதும், விளக்கேற்ற சொல்வதும், ”பாவம் நீங்கள் சிரமத்தில் இருக்கிறீர்கள்” என நாடகத்தனமாய் முகத்தை வைத்துக்கொண்டு வெற்றுரையாறுவதும் யாருக்காக?

உங்கள் அதிகாரிகள் சொல்லாத அங்கதம் என்ன தெரியுமா? தாங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவீர்கள் என அறிவிப்பு வந்தவுடன் மக்கள் பதறிப் போவதையும், அடுத்து என்ன தாக்குதல் வருமோ என அஞ்சுவதையும் கண்கூடாய் பார்க்க முடிவதுதான். நாட்டு மக்களை பதட்டத்திலேயே வைத்திருப்பதும், மிகத்திறமையாக அவர்களது பட்டினி விமோசன தீர்வு குறித்து பேசாமல் இருப்பதும் சாமர்த்தியம் என நீங்கள் உணர்ந்துள்ளீர்கள் சக்ரவர்த்தி! ஆனால் ஒன்றை மறந்தீர், திடீரென தங்களது நாட்டு முடக்க உத்தரவால் திகைத்துப் போன லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பிழைப்பிடங்களிலிருந்து வாழ்விடங்களுக்கு நீண்ட நடைபயணம் சென்றபோது அவர்களின் பாதங்கள் பிளந்து சாலைகளில் சிந்திய உதிரம் உலர யுகமாகும் என்பதுதான் அது. 

எவ்விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்படாமல் சமூக முடக்கம் என திடீரென்று அறிவித்ததன் விளைவாக பல லட்சக்கணக்கான மக்கள் கடும் துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். சமூக முடக்கம் அறிவிக்கப்பட்டபின் தற்போது வரை நடைபயணமாகச் சென்றவர்களில் உணவு இல்லாமலும், தங்குமிடம் இல்லாமலும், இயலாமையின் காரணமாகவும் மொத்தம் 334 பேர் இறந்துள்ளார்கள். இந்த மரணங்கள் உங்களை அசைக்காது என அறிவோம்! ஆனால் நம் அரசாங்கக் கிடங்குகளில் இருப்பில் இருக்கின்ற 7.5 கோடி டன்கள் உணவு தானியங்களை இப்போது கூட மக்களுக்கு கொடுக்காமல் எப்போது கொடுப்பீர் பிரதமரே? 

கொரோனா நோய்த்தொற்று மிகத்தீவிரமாய் உணரத் துவங்கியபின் தாங்கள் மூன்று முறை நாட்டு மக்களுடன் ”மன் கி பாத்” உரையாற்றி உள்ளீர்கள், ஆனால் அதின் ஒன்றுகூட ”ஜன் கி பாத்” இல்லை என்பதுதான் மிகப்பெரிய ஏமாற்றம். மாநிலங்கள் கேட்ட நிதியை கொடுப்போம் என நம்பிக்கையூட்டுவீர் என பார்த்தோம் ஆனால் உமது பேச்சில் ஒரு வார்த்தை இது குறித்து இல்லை. ஆனால் உமது அரசு கடந்த பாராளுமன்ற தேர்தலில் உமக்கு வாக்களித்த மறுத்த தென்மாநிலங்களை குறிப்பாய் தமிழகத்தையும் கேரளத்தையும் பழிவாங்கும் நோக்கோடு வஞ்சித்துள்ளது அறம் சார்ந்த அரசியலா பிரதமரே? தமிழகத்திற்கு 2017 ஆம் ஆண்டு முதல் தங்கள் மத்திய அரசு கொடுக்கவேண்டிய ஜிஎஸ்டி பங்கு ரூ.4073 கோடியையாவது இப்போது வழங்கலாம்தானே? மருத்துவ அவசர நிலையில் கூட கார்ப்ரேட் மருத்துவமணைகள் பாதிக்கப்படக்கூடாது, தனியார் நிறுவனங்கள் பாதிக்கக்கூடாது என்ற உமது உயர்ந்த உள்ளம் பூரிப்படைய வைக்கிறது!

சரி, நோய் எதிர்ப்பு போரிலாவது உண்மையுடன் நடந்துக்கொள்வீர் என நம்பினால் அதுவும் வார்த்தை ஜாலங்களில் நிரம்பி வழிகிறதேயல்லாமல் நடைமுறையில் ஏதும் நடைபெறுவதாக நம்பிக்கையளிக்கவில்லை. மற்ற நாடுகளில் பத்து லட்சம் பேருக்கு 13 ஆயிரம் பேர் சோதனை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் 10 லட்சம் பேர்களில் 102 பேருக்குத்தான் சோதனை செய்யப் பட்டிருக்கிறது என்ற உண்மை நமது மக்களுக்கு அச்சத்தை ஊட்டும்தானே?

இதோ இப்போது இந்த கடிதம் எழுதும் நேரம் வரை பல ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் மக்களுக்கு அல்ல, மருத்துவ பணியாளர்களுக்குக்கூட முக கவசங்களும் சுகாதார கருவிகளும் வந்து சேரவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மற்றொன்றும் தங்கள் கவனத்திற்காக..

கொரோனா எதிர்ப்பு போரில் நடக்கும் நிகழ்வுகள் உங்கள் தோல்வியை அப்பட்டமாய் வெளிச்சமிட்டு காட்டுவதை மறைக்க உங்கள் காவிப்படை இணைய வெளியிலும், ஊடக உலகிலும் செய்யும் திசை திருப்பும் நாடகங்கள் அருவெருப்பின் உச்சமாய் சென்றுக்கொண்டிருக்கிறது. உங்கள் நிழல் இராணுவமான, பணத்திற்காக பணியாற்றும் லட்சக்கணக்கான ட்ரோல்கள் (இணைய கூலிப் படைகள்) உண்மை நிலைமீது கவனத்தை செல்ல விடாமல் ஒவ்வொரு பொழுதிலும் பொய்க் கதைகளை மிகவும் நம்பகத்தன்மையுடன் உலாவ விடுகின்றனர். முதலில் கொரோனா வைரசுக்கு சீன வைரஸ் என பெயர்சூட்டினர், சீனாவின் வைரசாக கொரோனாவை பிறக்க வைத்தனர், பின்பு அதை சீனாவின் உயிரியல் ஆயுதம் என்று ஆதாரங்களை அடுக்கினர், இதில் சில தினங்கள் அவர்களுக்கு சென்றது. 

நீங்களோ அல்லது உங்கள் அகில இந்திய தலைமையோ, அல்லது அரசின் அதிகாரப்பூர்வமான நிலைபாடோ ”உயிரியல் போர்” என்பதல்ல; எனினும் உங்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதையே மீண்டும் மீண்டும் உச்ச காய்ச்சல் நோயாளி போல அனத்திக்கொண்டிருந்தனர். அது முழு வீச்சில் உங்கள் கூலிப் படைகளால் இணையத்தில் பதிவேற்றபட்டது.

1967 ஆம் ஆண்டு மார்பர்க் என்ற வைரஸ் உகாண்டாவில் கண்டறியப்பட்டபோது அது உகாண்டாவின் உயிரியல் ஆயுதம் என சொல்லப்படவில்லை. 1976 ஆம் ஆண்டு எபோலா எனும் வைரஸ் காங்கோவில் கண்டறியப்பட்டபோது அது காங்கோவின் உயிரியல் ஆயுதம் என சொல்லப்படவில்லை. இப்படியே 1999ல் நிபா வைரஸ் மலேசியாவிலும், 2002ல் சார்ஸ் வைரஸ் சீனாவிலும், 2009ல் A HI NI வைரஸ் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிலும், 2012ல் மெர்ஸ் வைரஸ் சவூதி அரேபியாலும் கண்டறியப்பட்டபோது அது அந்த நாடுகளின் உயிரியல் ஆயுதமாக மாறவில்லை. ஏனெனில் அப்போது உங்களுக்கு இப்படி ஒரு நிழல் படை ஊடகங்களிலும், இணையத்திலும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இன்று பொது சுகாதார அமைச்சகத்தின் தகவல் என்ன சொல்கிறது? விரைவுப் பரிசோதனைப் பைகள், மருத்துவ அங்கிகள், முகமூடிகள், கண்ணாடிகள் உட்பட 1.5 கோடி உபகரணங்களையும், அது தவிர 15 லட்சம் விரைவுப் பரிசோதனைப் பைகளையும் இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும் சீனத்திலிருந்து இறக்குமதி செய்கின்றன. இவை தவிர, சீனா 1,70,000 உபகரணங்களை தானமாகக் கொடுத்துள்ளது. இப்போது அந்த ‘சீன சதி’ என்ன ஆனது தெரியுமா? 

அதன் பின் அந்த வைரஸ் மதம் மாறியது உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்காது! ஆம், அது இஸ்லாமிய வைரஸாக அது மாறிவிட்டது. தில்லி மாநாட்டை வைத்து செய்திகள் சிறகு முளைத்து பறக்கத் துவங்கின. மொத்த ஊடகங்களும் இது டெல்லி மாநாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் என்று மட்டுமே கூறாமல் விட்டனர். அனால் அந்த மாநாடு நடத்த காலகட்டத்தில் நடந்த இராமர் கோயில் அடிகல் நாட்டு விழாவோ, மாகாராஸ்டிர அமைச்சரவை பதவியேற்போ, ஈஷா ஜக்கியின் குத்தாட்ட நிகழ்வோ அவர்கள் நினைவில் இல்லை போலும். 

மத்திய அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். ஊடகங்களிலும் இணைய வெளிகளிலும் ஆபாசமாகவும், பொய்களை மட்டுமே மூலதனமாக வைத்து உங்கள் காவிப்படை பரப்பும் பொய்ட்களை தடுத்து நிறுத்த வேண்டும். 

இறுதியாக ஒன்று, எப்போதும் நல்ல முன்னுதாரணங்களை எடுத்தாள்வது தவறு கிடையாது பிரதமரே! தனது சிறிய மாநிலத்தில் தனக்கு கிடைக்கும் வருவாயை வைத்து தனது மக்கள் மேல் மாறா அன்பு கொண்ட ஒரு அரசு என்னவெல்லாம் செய்யமுடியும் என உலகிற்கு வழிகாட்டும் கேரளத்தை பார்த்து படிப்பினை பெறுங்கள். மனிதர்கள் மட்டுமல்ல, காக்கை குருவி எங்கள் சாதியென எல்லா உயிர்களை பாதுகாக்கவும் அவர்களிடம் திட்டம் உள்ளது 

நீங்கள் அரசியல் சித்தாந்த அடிப்படையில் அம்மாநிலத்தின் மீது வெறுப்புகளை உமிழ்ந்தாலும் அந்த அரசு தனது மக்களை அடைகாக்கும் மகத்துவத்தை கற்றுணருங்கள். வாழ்வில் ஒருமுறையேனும் மனதால் பேச முயலுங்கள் பிரதமரே. இக்கடிதத்தை நீங்கள் படிக்க நேர்ந்தால் உங்களுக்கு பேரன்பும் நன்றியும்! 

இப்படிக்கு
உங்கள் நாட்டின் எளிய மனிதன்

;