tamilnadu

img

யோகி ராஜினாமா செய்திட வேண்டும் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்

பாலியல் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் சம்பவத்தில் நீதி கோரி நூற்றுக்கணக்கானவர்கள் தில்லி, நாடாளுமன்ற வீதியில், திரண்டனர். மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.  

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் மாநிலத்தில் தலித் மற்றும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இக்கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்றிட மாநில அரசும் அதன் காவல்துறையும் நடந்துகொள்ளும் விதம் குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசத்துடன் முழக்கங்களிட்டார்கள்.  

அரவிந்த் கேஜரிவால்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தில்லி மாநில முதல்வர் அரவிந்த கேஜரிவால் பேசியதாவது:

“நடந்துள்ள சம்பவங்கள் மிகவும் மனவலியைத் தருகிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்ணின் குடும்பத்தினரை, மற்றவர்கள் சந்திக்கவிடாமல் அவர்களைப் பூட்டி வைக்கக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க மறுத்திருப்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்திருப்பது அனைத்தும் மிகவும் மன வேதனையையும் வலியையும் அளிக்கின்றன. இக்கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களை மாநில அரசு காப்பாற்றும் விதத்திலேயே நடந்துகொண்டிருப்பதான எண்ணத்தை இவை ஏற்படுத்தி இருக்கின்றன.”

இவ்வாறு அரவிந்த் கேஜரி வால் கூறினார்.

சீத்தாராம் யெச்சூரி

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

“நடந்துள்ள கொடூரமான சம்பவம் குறித்து எதுவும் கூறாமல் மத்திய பாஜக அரசு மவுனம் கடைப்பிடிப்பது ஏன்? ஹத்ராஸ் சம்பவத்தில் பாஜக-வின் உயர்மட்டத் தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேச அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம், அக்கட்சியின் எதேச்சாதிகார கோர முகத்தைக் காட்டுகிறது.

பிரதமர் மோடி ஏன் மவுனமாக இருக்கிறார்? உள்துறை அமைச்சர் எங்கே? நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் ஏன் இன்னும் 144 தடை உத்தரவின்கீழ் இருக்கிறது?

உத்தரப்பிரதேச மாநிலம், பெண்கள் உட்பட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களையும், ஊடகத்தினரையும் தாக்கி இருப்பதன் மூலம், இவை அனைத்தும் மத்திய அரசின் ஆசியுடன்தான் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இந்த அரசாங்கத்தால் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மற்றும் மக்களின் வாழ்க்கை ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. இவற்றுக்குப் பதில் சொல்லாமல் அவர்கள் தப்ப முடியாது. பாஜக, ஜனநாயகத்தை வெட்கித்தலைகுனிய வைத்திருக்கிறது.

யோகி ஆதித்யநாத் தலைமையில் உள்ள உ.பி.அரசாங்கம் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதற்கு உரிமை எதுவும் இல்லை. எங்கள் கோரிக்கை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், நடிகர் ஸ்வரா பாஸ்கர், ஜிக்னேஷ் மேவாணி, பீம் சேனை தலைவர் சந்திரா மான்சேகர் ஆசாத், அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்கள் முதலானவர்களும் உரையாற்றினார்கள்.

(ந.நி.)