உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சேர்ந்த 19-வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அவசர அவசரமாக காவல்துறையினர் எரியூட்டினர். பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்காகாந்தி, ராகுல் காந்தி இருவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையுடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ஹத்ராஸ் சென்ற போது தொண்டர்களை தாக்க முற்பட்ட காவல்துறையினரை தடுத்து போது பிரியங்காவின் குர்தாவை காலவர் ஒருவர் இழுத்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது . இச்சம்பவத்திற்கு உத்தரபிரதேச காவல்துறை மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மக்களின் நலன் கருதி உத்தரப்பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சி.எல். ஜெயசுகின் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.