tamilnadu

img

தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்காதது ஏன்?

மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி 

சென்னை, ஏப்.8- கொரோனா பாதிப்பில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழ கத்துக்கு ஏன் அதிகமான நிதியை ஒதுக்கவில்லை என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குநர் ராஜேந்தர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமையன்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கும்போது ரூ.510 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது போதுமான நிதியாக இருக்காது. கொரோனா தொற்று குறைவாக உள்ள பிற மாநிலங்களுக்கு அதிகமான தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்துக்கு ஏன் குறைவாக ஒதுக்கியது என்று கேள்வி எழுப்பினர்.  மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தை இந்த வழக்கில் தாமாக முன்வந்து சேர்த்து, இதுதொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
 

;