சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது, ரபேல் ஊழல் விவகாரம், காவலாளியே திருடன் என்ற ராகுல் காந்தி மீதான அவதூறு ஆகிய முக்கிய 3 வழக்குகளின் தீர்ப்பு நாளை வெளியாகி உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயது பெண்களுக்கு அனுமதி வழங்கப்படாததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 'அனைத்து வயது பெண்களையும் அய்யப்பன் கோவிலில் அனுமதிக்கலாம்' என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் உட்பட, 48 மனுக்கள் மீது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில் சபரிமலை வழக்கில் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு நாளை காலை 10:30 மணியளவில் வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் ஊழல் நடக்கவில்லை என தீர்ப்பு வழங்கியது இதனை எதிர்த்தும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு மீதும், நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, 'காவலாளியே திருடன்' என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக, ராகுல் மீது பாஜக எம்.பி., மீனாட்சி லோகி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கிலும் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.