தி ஒயர் இணைய இதழ் தலைமை ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு, அலகாபாத் உயர்நீதிமன்றம், வெள்ளிக்கிழமையன்று உத்தரப்பிரதேச காவல்துறையினர் பதிவு செய்துள்ள இரு முதல் தகவல் அறிக்கைகள் மீது முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
ராம நவமி பண்டிகை தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அளித்த ஒரு மேற்கோளை தவறாகக் குறிப்பிட்டதாக, தி ஒயர் இணைய இதழ் தலைமை ஆசிரியர், சித்தார்த் வரதராஜன் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி மாவட்டக் காவல்துறையினர் ஏப்ரல் மாதத்தில் அவர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 188 (பொது ஊழியர் பிறப்பித்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமை), மற்றும் 505(2) (வகுப்புகளுக்கு இடையே பகைமை, வெறுப்பு அல்லது கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்திருந்தன. மேலும் ஒரு முதல் தகவல் அறிக்கையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-டி பிரிவின்கீழும் குற்றம் பதிவு செய்யப்பட்டிருந்தது. இக்குற்றமானது கணினியைப் பயன்படுத்தி மோசடி செய்ததற்காகத் தண்டனை அளித்திட வகை செய்கிறது.
இவ்விரு வழக்குகளிலும் அரசுத்தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில், குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்பதால், நாட்டைவிட்டு ஓடிவிட முடியும் என்றும், மேலும் காவல்துறையினர் இவ்வழக்கில் புலன் விசாரணையை முடித்து, குற்ற அறிக்கை தாக்கல் செய்துவிட்டனர் என்றும், எனவே விசாரணை நீதிமன்றம் இவரைக் கைது செய்வது குறித்து முடிவு மேற்கொள்ளலாம் என்றும் வாதிட்டனர்.
இவற்றைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி, மேலே குறிப்பிட்ட சட்டப்பிரிவுகள் குறித்து ஏராளமான தீர்ப்புரைகளில் விவாதிக்கப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டிருப்பதால், அரசுத்தரப்பு வாதங்களில் தகுதிப்பாடு எதையும் என்னால் காணமுடியவில்லை என்று கூறி, சித்தார்த் வரதராஜனுக்கு முன்ஜாமீன் அளித்துள்ளார்.