tamilnadu

img

தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசு ஏற்குமா- உயர் நீதிமன்றம்

தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை மேற்கொண்டால் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள்  ஏற்குமா என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் செலவை அரசே ஏற்கும் என்றால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் செலவை அரசு ஏற்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலித்து வரும் கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் ஏற்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என அரசு வரையறை விதித்துள்ளது. மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து  நீதிபதிகள் , அரசு மருத்துவனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடாக உள்ளதென தினந்தோறும் செய்திகளில் படித்து வருகிறோம். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கை விவரம் குறித்து மக்களுக்கு தெரிந்திருந்தால் மக்கள் எதற்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள்? தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் எழுத்து வாயிலாக குற்றசாட்டுகள் வருகின்றன என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை குறித்தும், கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வரும் 16ம் தேதிக்குள்  அரசு நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.