tamilnadu

img

சுருக்குமடி வலைக்கு தடை: புதுச்சேரி அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:
சுருக்குமடி வலைக்கு தடை விதிக்ககோரிய வழக்கில் புதுச்சேரி மாநில அரசு பதில் அளிக்கவேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி வீரமாபட்டினம் கடல்சார் மீன்வள பாதுகாப்பு குழு அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில், “புதுச்சேரியில் 25 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். அவர்கள் மாநில கடல் பகுதியில் படகுகள், நாட்டுப் படகுகளில் 15 கடல் மைல்கள் வரைச் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பலர் எந்திரப் படகுகளில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக் கின்றனர். சுருக்குமடி வலையின் மூலம் பெரிய மீன்கள் மட்டுமல்லாமல், மீன் குஞ்சுகளும் பிடிக்கப் படுகின்றன. பலமுறை அவர்களது வலைகளில் டால்பின் மீன்கள், ஆமைகள் சிக்குவதும் உண்டு.அதனால் மீன்வளம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் கேள்வி எழுப்பினால் மிரட்டல் விடுகிறார்கள். மீன் வளத்தை பாதுகாக்க தமிழ்நாடு மீன் வளத்துறை 2000ஆம் ஆண்டு சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், புதுச்சேரி அரசு இதுபோல எந்த ஒரு ஆணையையும் பிறப்பிக்கவில்லை. 2009ஆம் ஆண்டு புதுச்சேரி கடல் மீன்பிடி ஒழுங்குமுறை விதி கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த விதியை பெரிய படகுகளில் சென்று சுருக்குமடி வலைகளை பயன்படும் மீனவர்கள் கடைபிடிப்பதில்லை.
இது குறித்து புதுச்சேரி அரசுக்கு இருமுறை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடை விதிக்கும்படி புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அப்போது புதுச்சேரி அரசு தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டார் வாதாடினார்.அதனால் நீதிபதிகள், சுருக்குமடி வலை மூலம் மீன் பிடிப்பது தீவிரமான பிரச்சனை என்று கருத்து தெரிவித்து, வழக்கை 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். அதற்குள் புதுச்சேரி அரசு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர்.

;