சென்னை,அக்.14- தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டி யிட்ட கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை திரும்பப் பெற தமிழிசை சவுந்தரராஜ னுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கனிமொழியின் வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகக் கூறி, தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் அவர் பெற்ற வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார். மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த போது, தமிழிசை சவுந்தர ராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கனி மொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்பப் பெற அனுமதிகோரி அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு திங்களன்று(அக்.14) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏற்கெனவே உத்தரவிட்டபடி, இந்த வழக்குதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேர்தல் வழக்கை திரும்பப் பெற தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதியளித்தார். மேலும், வழக்கு திரும்பப் பெற்றது குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் 10 நாட் களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தமிழிசைக்கு உத்தரவிட்டார். இதனிடையே தனது வெற்றியை எதிர்த்து வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இதுதொடர்பாக சந்தானகுமார் பதில் அளிக்க உத்தர விட்டு விசாரணையை அக்டோபர் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.