tamilnadu

கிட்னிக்கு ரூ.3 கோடி தருவதாக முகநூல் மூலம் மோசடி

ஈரோடு, ஜூன் 5-ஈரோட்டில் ரூ.3 கோடிக்கு கிட்னி வாங்குவதாகக் கூறி மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சம்பத் நகர் சாலையில் கல்யாணி கிட்னி சென்டர் அமைந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த ஷரவந்தி என்றபெண் கல்யாணி கிட்னி சென்டர் மருத்துவரை தொடர்பு கொண்டு இம்மருத்துவமனையில் சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.3 கோடி தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த கோரியதால் அதில் கூறிய வங்கி கணக்கில் ரூ.15,000 செலுத்தினேன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இது குறித்து விசாரித்ததில் எங்கள் மருத்துவமனை பெயரைப் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு மூலம் சிறுநீரகத்திற்கு ரூ3 கோடி பணம் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த மோசடியால் குடும்பம் கஷ்டத்திற்காக தங்களது சிறுநீரகத்தை விற்க தயாராக இருந்தவர்கள் பணம் கட்டி ஏமாந்து உள்ளனர். எனவே மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகாரளித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.இந்த புகார் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் இந்த கும்பல் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் பல பேரிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.