tamilnadu

img

தீ தடுப்பு பயிற்சி

கோபி, மே 16-கோபியில் தனியார் பள்ளிகளில் வாகன ஓட்டிகளுக்கு தீ விபத்தைத் தவிர்ப்பது குறித்து தீயணைப்புத் துறையினர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குட்ட கோபி மற்றும் பவானி தாலுக்காக்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளின் 250க்கும் மேற்பட்ட வாகனங்களை ஒத்தக்குதிரையில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி வாளாகத்தில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது தீயணைப்புத் துறையின் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் அறுமுகம் தலைமையில் தீவிபத்தைத் தடுப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த செயல் விளக்கத்தில் பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவியை கையாளுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டவுடன் தீ எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு எவ்வாறு தீயை அணைப்பது என்றும் விளக்கப்பட்டன. மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் அவர்களை எவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்தும் தீயணைப்புத்துறை வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.