கோபி, மே 16-கோபியில் செயல்படும் ஒரு செல்போன் கடையில்ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி-மொடச்சூர் சாலையில் ஜாலிமொபைல் என்னும் செல்போன் கடையை ஜமாலுதீன் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கம்போல் கடையின் உரிமையாளர் காலையில் வந்து கடையை திறந்து பார்க்கையில் கடையினுள் இருந்த அதிகவிலையுடைய ஐ போன்களும், கடையில் வைத்திருந்த ரொக்கமும் திருடு போயுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.2.50 லட்சம் மதிப்பிலான உயர்தர ஐ போன்களும், பென்டிரைவ் மற்றும் பழுது நீக்கம் செய்ய வந்த செல்போன்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கமும் என மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள்திருடு போயுள்ளதாக புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர்ஒருவர் கடையின் கிரில் கதவின் கம்பிகளை வெட்டியெடுத்து துளையிட்டு அதன் வழியாக உள்ளே சென்றுசெல்போன்களை கொள்ளையடித்து மீண்டும் அதேவழியில் தப்பிச் செல்லும் சிசிடிவி படக்காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் கடையில் கொள்ளையடித்து சென்றவர் வட மாநில இளைஞர் என்பது தெரிய வந்தது. அடையாளம் தெரியாத வடமாநில் இளைஞர் செல்போன் கடையின் கிரில் கதவை துளையிட்டு கொள்ளையடித்து சென்றது இப்பகுதி வணிகர்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.