நாகப்பட்டினம், நவ.17- நாகை மாவட்டம், சிக்கலுக்கு அருகிலுள்ள பனங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தோழர் சிக்கல் பக்கிரிசாமி. விவசாயிகளின் உரிமைகளுக்காகப் பல போராட்டங்களில் பங்கேற்றவர். விவசாய சங்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் வளர்ச்சிக்காக இளைய வயதிலிலிருந்தே பாடுபட்டவர். இதனைப் பொறுத்துக் கொள்ளாத வர்க்க எதிரிகள், 1968, நவம்பர்-17 அன்று, சிக்கல் கடைத்தெருவில் இரவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 1968, டிசம்பர்-25 ல், வெண்மணி தியாகிகள் 44 பேர் வெந்தணலில் சாம்பலான தினத்திற்கு 38 நாட்களுக்கு முன் இந்தக் கோரச் சம்பவம் நடைபெற்றது. தியாகி சிக்கல் பக்கிரிசாமியின் 51-வது நினைவு தின நிகழ்ச்சிகள், ஞாயிற்றுக்கிழமை காலை பனங்குடி கிராமத்திலும், நினைவுப் பொதுக்கூட்டம் சிக்கல் கடைத்தெருவிலும் நடைபெற்றன.
தோழர் பக்கிரிசாமியின் நினைவுக் கல்வெட்டுக் கொடிக் கம்பத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் செங்கோடியை ஏற்றி வைத்தார். தியாகி பக்கிரிசாமியின் உருவப்படத்தை சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினரும், ஏராளமான தோழர்களும் பொதுமக்களும் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக உரிய கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அன்று மாலை சிக்கல் கடைத்தெருவில் தியாகி பக்கிரிசாமி நினைவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சி.பி.எம். நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு பொதுக்கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், கே.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, கே.பாலகிருஷ்ணன், தியாகி சிக்கல் பக்கிரிசாமியின் நினைவிடம் சென்று, மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார். நாகை ஒன்றியக்குழு உறுப்பினர் வி.வி.ராஜா நன்றி கூறினார். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், வட்டம், ஒன்றியம், கிளைச் செயலாளர்கள், வெகு ஜன இயக்க நிர்வாகிகள், ஏராளமான தோழர்கள், பொதுமக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.