tamilnadu

img

அத்தியாவசிய பொருட்கள் நகர்வை கண்காணிக்க 3 சோதனை சாவடிகளில் வட்டாட்சியர்கள் நியமனம்

காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ஆகிய மூன்று சோதனை சாவடிகளில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணித்து அனுமதி வழங்கும் பொருட்டு துணை வட்டாட்சியர் நிலையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
   இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள மாநில எல்லையில் அமைக்கப்பட்டுள்ள காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ஆகிய மூன்று சோதனை சாவடிகளில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதை கண்காணித்து அனுமதி வழங்கும் பொருட்டு துணை வட்டாட்சியர் நிலையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 53 பேர் கொரோனா நோய்த்தொற்று சந்தேக பட்டியலில் இருந்து சோதனை செய்யப்பட்டு உள்ளனர். இதில் 50 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய் தொற்று இல்லை. வெள்ளியன்று பரிசோதனை முடிவுகள் நிலுவையில் இருந்த 10 நபர்களும் இதில் உட்பட்டவர்கள் ஆவர். மீதமுள்ள 3 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய தேதியில் (மார்ச் 29) அரசு ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 237 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. துணை ஆட்சியர் நிலையில் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, தொடர்பு தடமறிதல் கண்காணிப்புக்குழு, தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைப்புக்குழு, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிவாரண நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு குழு, நோய் தொற்று கண்காணித்தல் மருத்துவமனைகளின் தேவைப்பட்டியல், அத்தியாவசிய தேவைகளுக்கான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வது, தேவைப்படும் இடங்களுக்கு அனுப்புவது, இடம் பெயர்ந்து வந்தவர்கள், ஓரிடத்தில் தங்கியிருப்பவர்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருதல், சுகாதார உட்கட்டமைப்புகள் மற்றும் நோய் கிருமிகளை நீக்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் குழு, மாநில கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை அனுப்பும் குழு ஆகிய 9 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.