tamilnadu

img

கஜா புயலுக்கு பிந்தைய இயற்கை மாற்றம்

தஞ்சாவூர், மே 25-பூக்களுக்கு கட்டுப்படியான விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டி உள்ள புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளான மேற்பனைக்காடு, கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, மாங்காடு, மறமடக்கி, திருநாலூர், தஞ்சாவூர் மாவட்டத்தில் களத்தூர், பைங்கால், சித்தாதிக்காடு உள் ளிட்ட இடங்களில் மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் குறிப்பாக மல்லிகை, முல்லை, சாமந்தி,அரளி, செண்டி, ரோஜா மலர்கள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டது. தற்போதுகடந்த 6 மாதமாக போதிய மழை இல்லாததாலும், கடந்தாண்டு வீசிய கஜாபுயல் காரணமாகவும் மலர்கள் உற்பத்திவெகுவாக குறைந்து விட்டது. தற்போதுதேவை குறைவாக இருப்பதால் விலை வெகுவாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

வாசம் இழக்கும் மலர்கள் 

இதுகுறித்து மலர் சாகுபடி விவசாயி செரியலூர் பகுதி பகவத்சிங் கூறியதாவது:“கஜா புயலில் மலர்ச் செடிகள் வேரோடுபிடுங்கி எறியப்பட்டன. சாய்ந்த நிலையில் இருந்த செடிகளை நிமிர்த்தி தண்ணீர் பாய்ச்சி உரம் வைத்து மீள்நடவுசெய்தும், உரிய பலன் கிடைக்கவில்லை. புயலுக்கு பின்னர் பூச்சி தாக்குதல் காரணமாக மஞ்சள் நிறத்தில் செடிகள் மாறிவிட்டன. மலர்களும், போதிய மழை இல்லாததாலும், புயலுக்கு பிந்தைய இயற்கைமாற்றத்தாலும், போதிய அளவு வளர்ச்சிஇன்றி உள்ளது. மலர்களின் இயற்கையான வாசனைத் தன்மையும் மெதுவாகமாறி விட்டது. தற்போது விளையும் மலர்கள் தங்கள் இயல்பான வாசனையின்றி போய்விட்டன. இயற்கை கருணை வைத்து மழை பொழிந்தால் மட்டுமே மலர்கள் வாசனையோடு மணக்கும். பூச்சி தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து மருந்து தெளிக்க வேண்டியுள்ளது. 10 கிலோ மலர் விளைவிக்கவே ரூ.600 முதல் ரூ.800 வரை மருந்துச் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பூப்பறிக்க மட்டும் கிலோவிற்கு ரூ.30முதல் ரூ.50 வரை தொழிலாளிகளுக்கு கூலி தர வேண்டி உள்ளது. ஒரு கிலோபூ உற்பத்திக்கு ரூ.100 வரை செலவு செய்தும், சந்தையில் ரூ.100-க்கு மேல்விற்க முடிவதில்லை. திருவிழா, முகூர்த்த காலங்களில் மட்டுமே ஓரளவிற்கு விலை கிடைக்கும். தோட்டக் கலை துறை அலுவலர்கள் பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். வேறு தொழில் தெரியாமலேயே, எந்தலாபமும் இன்றி, இதே மலர் உற்பத்தி தொழிலில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறோம்” என்றார் வேதனையுடன்.

சரிந்த பூக்கள் உற்பத்தி 

பூ மொத்த விற்பனையாளர் கீரமங்கலம் செல்வராஜ் கூறுகையில், “கஜா புயலில் வளர்ந்த செடிகளின் வேர்கள், பூமியை விட்டு வெளியே வந்து விட்டன. விவசாயிகள் பாடுபட்டும் பலனின்றி போனது. பூக்கள் சிறுத்து, வாசனையின்றி விளைவதாலும், தற்போது சீசன்இல்லாமல் இருப்பதாலும், திரட்சியானமதுரை மல்லி வரவாலும், இங்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலர்கள் போதிய விலை கிடைப்பதில்லை. குறைந்தஉற்பத்தி, தேவை குறைவு காரணமாகவிவசாயிகள் போலவே, மொத்த வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளோம். சீசன் நேரத்தில் கிலோ ரூ.500 முதல்ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டமல்லிகை, முல்லை மலர்கள் தற்போதுரூ.100- 120க்கு தரத்திற்கு தகுந்தாற் போல் மொத்த விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ மலர்களின் விலைரூபாயில் மல்லிகை(120), முல்லை (120),சாமந்தி(50), அரளி(120), செண்டி(50- 70 வரை), சாதா ரோஜா(80) என விற்பனைசெய்யப்பட்டது. டன் கணக்கில் உற்பத்திசெய்யப்பட்டு விற்பனைக்கு வந்த மலர்கள் தற்போது 100 கிலோ 200 கிலோ என்றஅளவில் வரத்தில் உள்ளது என்றார். பேராவூரணி பூ வியாபாரி நீலகண்டன் கூறுகையில், உதிரியாக மல்லிகைப்பூ, முல்லைப்பூ 100 கிராம் ரூ.20 என்ற விலையில் விற்பனை ஆகிறது. தொடுக்கப்பட்ட பூ முழம் ரூ.15-க்கு விற்கிறோம். ரோஜாப்பூ வரத்து சுத்தமாக நின்று விட்டது. உதிரிப்பூ 5 முதல்10 கிலோ விற்கும். சமயத்தில் உதிரிப் பூ மலர்ந்து விட்டால் விற்பனை செய்யமுடியாது. தற்போது விற்பனை மந்தமாகவே உள்ளது. பூக்களை தொழிலாளர்களை வைத்து, அதிகாலை 5 மணிக்கே பறித்துக் கொண்டு வந்து, மார்க்கெட்டில் 7, 8 மணிக்குள் விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்துவிடுகின்றனர். தாமதமானால் போதியவிலை கிடைக்காமல் போகும் அபாயம்உள்ளது. மொத்த வியாபாரிகளிடம் 10 மணிக்குள் சரக்குகள் தீர்ந்து விடும்என்றார்.  மலர் தோட்ட தொழிலாளர்களும், விவசாயிகளும், தங்களுக்கு கிடைக் கும் சொற்ப வருமானத்திற்காக பாம்புக்கடி, விசப் பூச்சிகள் கடி இவற்றை சமாளித்து உயிரைப் பணயம் வைத்து அதிகாலை இருளில் மலர் பறிக்கச் செல்கின்றனர். இவர்களின் வாழ்வும் மலரும் காலம் எப்போதோ? 

-ஊருணியான் எஸ்.ஜகுபர்அலி