tamilnadu

img

தேசிய நெடுஞ்சாலை பயணிகளுக்கு இலவச பயண வழி சாப்பாட்டு மேஜை

கருங்குழி பேரூராட்சி அசத்தல்

செங்கல்பட்டு, ஆக. 24 - தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணிகள் சாவகாசமாக அமர்ந்து உண்ணும் வகையில் சாலையோர பயணவழி சாப்பாட்டு மேஜை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  அனைத்து வசதிகளுடன் கூடிய இந்த பூங்காவை கருங்குழி பேரூராட்சி நிர்வாகம் அமைத்து அசத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திற்குட்பட்ட கருங்குழி பேரூராட்சி, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலவளம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், சென்னை - மதுராந்தகம் மார்க்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வளம் மீட்பு பூங்கா ஒன்றை அமைத்திருந்தனர். இந்த பூங்காவில் உள்ளூர்வாசிகளும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகளும் பயன்படுத்தி வந்தனர். கார், இருசக்கர வாகனங்களில் பயணம் செய்யும் சிலர் பூங்காவில் அமர்ந்து உணவருந்தி வந்தனர். இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் பூங்காவை மேம்படுத்தி இருச்சக்கர, கார் பார்க்கிங் வசதியுடன் 25 நபர்கள் அமர்ந்து உண்ணும் வகையில் சிமென்டால் ஆன சாப்பாட்டு மேஜைகள், கை கழுவும் இடம், கழிவறை, குழந்தைகள் விளையாட சிறுவர் பூங்கா என அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. மேலும், பூங்காவில் எட்டு வடிவில் நடைபயிற்சி செய்வதற்கான வசதியும், நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்து இயற்கை சூழலை ஏற்படுத்தியுள்ளனர். பூங்கா ழுழுவதும் பூச்செடிகளும், மூலிகை தாவரங்களையும் நட்டு வைத்துள்ளது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இதனால் உள்ளூர் மக்களும், நெடுஞ்சாலை பயணிகளும் அந்த பூங்காவை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் கூறுகையில், அந்த இடம் வளம் மீட்பு பூங்காவாக இருந்த போது கார், இருசக்கர வாகங்களில் செல்பவர்கள் வந்து அமர்ந்து உணவருந்தி செல்வதை காண முடிந்தது. இதனால் பேரூராட்சி நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் பூங்காவை மேம்படுத்தி உள்ளோம். பூச்செடிகளும், மூலிகை செடிகளும் பூங்காவில் இருப்பது பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளது. எதிர்காலங்களில் அங்கு இலவச இணைய வசதி செய்யவும் திட்டம் உள்ளது. இதுவரையிலும் பூங்கா இலவசமாகவே பயன்படுத்தும் வகையில் உள்ளது என்றார். -பார்த்திபன்