tamilnadu

img

நீலகிரி - இயந்திரத்தில் சிக்கி பலியான இளம்பெண் நந்தினி குடும்பத்திற்கு நிதியுதவி செய்திடுக!

அரசு நிர்வாகத்திற்கு சிபிஎம் வலியுறுத்தல்

நீலகிரி,ஏப்.28- உதகை அருகே இயந்திரத்தில் சிக்கி பலியான இளம்பெண்  நந்தினி குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியுதவி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாலாடா எனும்  இடத்தில், கூலித் தொழிலாளியாக பணியாற்றும் நந்தினி (18 ) எனும் இளம்பெண் கேரட் கழுவும் இயந்திரத்தில் துப்பட்டா மாட்டிக்கொண்டதால் தலை துண்டாகி உயிரிழந்த துயரச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இவரது தந்தை சுப்ரமணி (51) ஒரு கூலித் தொழிலாளியாவார். அவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இந்த குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பமாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தோழர்கள் உடனடியாக நந்தினியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு தங்களால் இயன்ற பொருள் மற்றும் சிறு பண உதவிகளை செய்திருக்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உயிரிழந்த நந்தினியின் குடும்பத்திற்கு உடனடியாக அரசின் சார்பில் நிவாரண நிதி அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் , குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை விடுத்து கடிதங்களையும் அனுப்பியிருக்கிறார்.

மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரியும் மாவட்ட ஆட்சியர் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் வலியுறுத்தியதோடு, முதலமைச்சரின் தனிப்பிரிவு செயலாளருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும் கோரிக்கை குறித்து மின்னஞ்சல்களையும் அனுப்பி வைத்திருக்கிறார்.. ஆனால் பல நாட்கள் கடந்த பின்னரும்

உதவி கிடைக்குமென காத்திருக்கும் குடும்பத்திற்கு இதுவரையிலும், அரசுத் தரப்பிலிருந்து எந்தவொரு உதவியும் கிடைக்கவில்லை என்பதோடு, அரசு அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ நேரில் சென்றும் ஆறுதல் கூறவில்லை என்பதும் அதிர்ச்சி அளிக்கிறது.. எனவே, உயிரிழந்த நந்தினி குடும்பத்திற்கு, தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.