tamilnadu

img

தரங்கம்பாடி கடற்கரை தூய்மைப் பணியில் ஈடுபட்ட டென்மார்க் நாட்டு மாணவர்கள்

தரங்கம்பாடி, பிப்.3- நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் டென்மார்க் நாட்டு பள்ளி மாணவர்கள் 5 நாட்கள் கல்வி களப்பயணத்தை மேற்கொண்டனர். கி.பி 1620 முதல் 1845 வரை தரங்கம்பாடி மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளை ஆட்சி செய்து வந்தவர்கள் டேனிஷ்காரர்கள்.  இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை பிரிட்டிஷார் ஆட்சி செய்த நிலையிலும் தரங்கம்பாடி பகுதியை மட்டும் டென்மார்க் நாட்டினர் தங்களின் வர்த்தக மையமாக வைத்துக் கொண்டு டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஏராளமான பொருட்களை தரங்கம்பாடியில் உற்பத்தி செய்து கடல் மார்க்கமாக வணிகம் செய்து ஆதிக்கம் செய்தனர். 

இதனால் டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியை தங்களது மற்றொரு தாய் நாடாகவே கருதி ஒவ்வொரு நாளும் எவரேனும் இங்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனிடையே டென்மார்க் நாட்டிலுள்ள வெஸ்பைன்ஸ் எஃப்டர் பள்ளியில் பயிலும் 35 மாணவர்கள் தலைமையாசிரியை மரியா தலைமையில் 8 ஆசிரியர்களுடன் 5 நாட்கள் களப்பயணம் மேற்கொண்டனர். தமிழகப் பள்ளிகளின் கல்வி முறை, தமிழ் கலாச்சாரம், தொழில் முறைகள், வரலாறு ஆகியவற்றை அறிந்து கொண்டதாகவும், டேனிஷ்கோட்டை அருகேயுள்ள கல்லறை தோட்டத்தில் டென்மார்க் நாட்டின் மூதாதையர்கள் அடக்கம் செய்யப்பட்ட பல நூறு ஆண்டுகள் கடந்த பழமையான சமாதிகளில் வர்ணம் பூசிய அழகுப்படுத்தியதோடு, தரங்கம்பாடி கடற்கரையில் கிடந்த 4 டன் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியிலும் டென்மார்க் மாணவர்கள் ஈடுபட்டதாகவும் டென்மார்க்- தரங்கம்பாடி நலச் சங்கத்தின் தலைவரான டென்மார்க் நாட்டை சேர்ந்த பவுல் பீட்டர்சன் கூறினார். மேலும் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, தரங்கம்பாடி பகுதி மக்களின் வாழ்வாதார சூழல் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொண்டதாகவும் கூறினர்.

;